ஒன்றாக சேர்ந்து விமானப்படை ஹெலிகாப்டரை இயக்கிய தந்தை-மகன்
சென்னை: விமானப்படை பயிற்சி பள்ளி வரலாற்றில் தந்தையும், மகனும் சேர்ந்து சேத்தக் ஹெலிகாப்டரை இயக்கியது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையின் பயிற்சி பள்ளி சென்னை தாம்பரத்தில் உள்ளது. கடந்த 30ம் தேதி தென்பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் அருண் புருஷோத்தம் கருட் தனது மகன் லெப்டினென்ட் கமாண்டர் அபிஜித் கருடுடன் தேர்ந்து தாம்பரம் விமானப் படை நிலையத்தில் சேத்தக் ஹெலிகாப்டரை இயக்கினார்.

அவர்கள் சுமார் ஒரு மணிநேரம் ஹெலிகாப்டரில் பறந்தனர். அப்போது அருண் தனது மகனுக்கு பிறருக்கு விமானத்தை இயக்க பயிற்றுவிப்பதில் உள்ள நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார்.
ஏர் மார்ஷல் கருடுக்கு 6 ஆயிரத்து 300 மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் உள்ளது. அவர் பல வகையான விமானங்களை இயக்கியுள்ளார். மேலும் விமானங்களை இயக்க பிறருக்கு பயிற்சி அளித்துள்ளார்.
ஏர் மார்ஷல் கருட் வரும் மே மாதம் இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய விமானப்படை தளபதி என்.ஏ.கே. பிரவுன் தான் ஓய்வு பெறும் முன்பு புனே தளத்தில் இருந்து தனது மகன் ஸ்குவாட்ரன் லீடர் ஒமர் பிரவுனுடன் சேர்ந்து சுகோய் விமானத்தை இயக்கினார்.
அதற்கும் முன்பு 1990களில் ஹைதராபாத்தில் உள்ள விமானப் படை அகாடமியில் பயிற்சியின் ஒரு பகுதியாக தந்தையும், மகளும் சேர்ந்து விமானத்தை இயக்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications