முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொலை.. சென்னையில் பயங்கரம்
சென்னை வளசரவாக்கத்தில் தந்தை, மகன் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் ஆகியோர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் அதிமுக சேர்ந்தவர்கள் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை வளசரவாக்கம் கணபதி நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(55) அ.தி.மு.க., ஓட்டுனர் அணி நிர்வாகி. இவரது மகன் சாந்தனு(25) அ.தி.மு.க., முன்னாள் வார்டு செயலர்ட. தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்தார். இவர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று மாலை 3:30 மணிக்கு ராஜ்குமார் வீட்டிற்கு வந்த வாலிபர் ஒருவர் தண்ணீர் கேன் வியாபாரம் தொடர்பாக பேச வேண்டும் என சாந்தனுவை அழைத்து சென்றுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, அங்கு வந்த இரண்டு பேர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால், சாந்தனுவை சரிமாரியாக வெட்டி கொன்றது. சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மகன் சாந்தனுவையும் அந்த கும்பல் வெட்டி சாய்த்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.