வாங்க, வாங்கன்னு கூப்பிட வேண்டியது.. ஸ்டிரைக் பண்ணா எப்படி.. மகளுடன் போராட்டத்தில் குதித்த தந்தை
ஆசிரியர்களை கண்டித்து மகளுடன் சாலை மறியலில் தந்தை ஈடுபட்டார்.
வால்பாறை: ஆசிரியர்களை 2 நாளாக காணோம்.. என்று சொல்லி தந்தை ஒருவர் தன் குழந்தையுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுக்கு எதிராக இவர்கள் போராட்டத்தில் இறங்கினாலும், இதனால் மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள், கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டி ஆசிரியர்களை விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று காலை வால்பாறையில் உள்ள அரசு பள்ளிக்கு ஒருவர் குழந்தையை அழைத்து கொண்டு வந்தார். அந்த குழந்தை அந்த பள்ளியில் படித்து வரும் மாணவி போலும். அப்போது ஸ்கூல் கேட் மூடியிருந்ததை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
உடனே தனது மகளுடன் நடுரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார். தனி ஒரு ஆளான மகளுடன் இப்படி மறியல் செய்த நிகழ்வு அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதனால் அவரிடம் போலீசார் சென்று பேசினர்.
ஒருத்தரும் வரல
அப்போது அவர் சொன்னதாவது: "2 நாளாக ஆசிரியர்களை காணோம். ஏற்கனவே வால்பாறை அரசு பள்ளியில் டீச்சர்களே பற்றாக்குறையாக உள்ளது. 5 டீச்சர்கள் இருக்கிற இடத்தில் ஒரே ஒரு டீச்சர்தான் இருக்கிறார். இன்னைக்கு அவரும் வரலை.
எம்பியை கூப்பிட்டேன்
டீச்சர்ங்க இப்படி பண்ணா அது வன்முறை இல்லை, இதையே பொதுமக்கள் பண்ணினா வன்முறையா? குழந்தைகள் எல்லாம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். நான் போய் எம்எல்ஏவை கூப்பிட்டேன், எம்பியை கூப்பிட்டேன், யாருமே இதை கண்டுக்கல. அதனாலதான் நான் தனியா இப்படி ரோட்டில் உட்கார்ந்துட்டேன். ஏன்
என்ன நியாயம்?
ஆசிரியர்கள் ஏன் இப்படி செய்கிறார்கள். மாதா, பிதா, குரு தெய்வம்ன்னு சொல்றாங்க. இப்போ குரு எல்லாம் எங்கே போனாங்க? மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் 40 ஆயிரம், 50 ஆயிரம் வாங்கிட்டு இப்படி ஸ்டிரைக் பண்ணினா என்ன நியாயம்? தனியார் பள்ளிகளில் 15 ஆயிரம் 20 ஆயிரம் சம்பளம் வாங்கிட்டு வேலை செய்யறாங்க.
கவனிக்கிறதே இல்லை
நீதிமன்றத்தையே டீச்சர்ங்க மதிக்கவில்லை. அரசு பள்ளிக்கு வாங்க... அரசு பள்ளிக்கு வாங்கன்னு கூப்பிட வேண்டியது. அதை நம்பி நாங்க குழந்தைங்கள சேத்துவிட்டா, ஒருத்தரும் கவனிக்கறது இல்லை. டி.ஆர்.ஓ (வட்டார கல்வி அதிகாரி) வரட்டும். அதுவரை நான் எழுந்து போகமாட்டேன்" என்றார் ஆவேசமாக.