'அம்மா' சொன்னாதானா... நம் வீட்டு மாடியில் பறவைகளுக்கு தண்ணீர் பந்தல்... நாமளும் செய்யலாமே!
சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தாலும், கோடையின் உக்கிரம் சென்னையில் கொதித்துத் தான் கிடக்கிறது.
வெயிலின் கொடுமைக்குப் பயந்து மனிதர்களே வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். மனிதர்களுக்கே இந்த நிலை என்றால் பாவம் பறவைகள், விலங்குகளின் நிலையை நினைத்துப் பாருங்கள்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் கட்டிடங்கள் மட்டுமே காணப்படும் நகரத்தில் பாவம் தண்ணீர் தேடி பறவைகளும் அலைந்து தான் கொண்டிருக்கின்றன. கோடையின் உக்கிரம் தாளாமல் பல சிறிய பறவைகள் இறந்து விடும் அவலமும் உள்ளது.

பறவைகளின் தாகம்...
பறவைகளின் வீடாகிய மரங்களை அழித்து, அவற்றிற்கு நீர் ஆதாரமான குளம், ஏரி போன்றவற்றையும் அழித்து, குழாயில் சுயநலமாக நீர் பிடித்து வாழும் நாம் நினைத்தால் பறவைகளின் துயரத்திற்கு சிறிய அளவில் தீர்வு காண முடியும்.

சிறிய கிண்ணம்... பெரிய மனசு
அதற்குத் தேவையானதெல்லாம், ஒரு சொம்புத் தண்ணீர், சிறிய கிண்ணம் மற்றும் பெரிய மனசு மட்டும் தான். ஆம், நம் வீட்டு மாடிச் சுவற்றிலோ, பால்கனியிலோ அல்லது வீட்டு காம்பவுண்ட் சுவற்றிலோ சிறிய கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விட்டாலே போதும். அந்த வழியாக செல்லும் பறவைகள் அவற்றைக் குடித்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.

வீட்டு தண்ணீர் பந்தல்...
சாலைகள் தோறும் மக்களுக்கு தண்ணீர் பந்தல்கள் தேவைப்படுவது போல, பறவைகளுக்கும் நாம் இது போன்று வீட்டில் சிறிய தண்ணீர் பந்தல்கள் போன்று அமைக்கலாம். ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி'.. என்ற பாரதியின் பரம்பரை நாம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சபாஷ்...
அட எங்கண்ணே கிளம்பிட்டீங்க... கிண்ணத்துல தண்ணீ ஊத்தி பறவைக்கு வைக்கவா... சபாஷ் உங்களைத் தாங்க பறவைகள் தேடிட்டு இருக்கு !












Click it and Unblock the Notifications