பெரா வழக்கு: ஜூன் 21ல் வீடியோ கான்பிரன்சிங்கில் ஆஜராக சசிகலாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி வழக்கில் ஜூன் 21-ஆம் ஆண்டு சசிகலா வீடியோ கான்பிரன்சிங்கில் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: பெரா வழக்கில் விசாரணை நடத்த சசிகலா வீடியோ கான்பிரன்சிங்கில் வரும் 21-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஜெ.ஜெ.டிவிக்கு வெளிநாடுகளில் இருந்து கடந்த 1996-97-ஆம் ஆண்டு ஒளிபரப்பு சாதனங்கள் வாங்குவதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதில் மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களுடன் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக சசிகலா, பாஸ்கரன் மற்றும் ஜெ.ஜெ. டிவி ஆகியவற்றின் மீது 5 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்தது.
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாஸ்கரன் மீது குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டது. அதேபோல் தினகரன் மீதும் கடந்த சில நாள்களுக்கு முன்னர் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

குற்றச்சாட்டுகள் பதிவு
ஜெ.ஜெ.டிவிக்கு உபகரணங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தது தொடர்பாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரிடமும் விசாரணை நடத்தி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய வேண்டும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.

காணொலி காட்சி மூலம்...
எனினும் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளாதாலும், அவரது உடல்நிலை மோசமாக உள்ளதாலும் அவரை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்த சசிகலா தரப்பு வழக்குறிஞர் அனுமதி கோரினார்.

சிறைத் துறை ஒப்புதல்
இதற்கு நீதிபதி ஒப்புக் கொண்டார். ஆனால் கர்நாடக சிறைத் துறை அனுமதி வழங்கவில்லை எனில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து பெங்களூர் சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது.

இன்று விசாரணை
இந்நிலையில் தம்மிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகள் குறித்து முன்கூட்டியே அமலாக்கத் துறை வழங்க வேண்டும் என்று சசிகலா வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கை நீதிபதி நிராகரித்தார். இதைத் தொடர்ந்து வீடியோ கான்பிரன்சிங்கில் சசிகலா ஆஜராவது குறித்து இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ஜூன் 21-இல் ஆஜராக உத்தரவு
அப்போது சசிகலா ஜூன் 21-ஆம் தேதி வீடியோ கான்பிரன்சிங் மூலம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே சிறையில் உள்ள சுதாகரனிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. அவரை நேரில் அழைத்து வந்தால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்பதால் அவரை சென்னைக்கு அழைத்து வரும் முடிவு கைவிடப்பட்டது. எனவே அவரும் வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்த மனு தாக்கல் செய்யலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications