அன்னிய செலாவணி மோசடி வழக்கு: டி.டி.வி.தினகரன் மனு தள்ளுபடி- ஆஜராக உத்தரவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியும் வரை விசாரணையை தள்ளிவைக்க கோரிய டிடிவி தினகரன் மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கில் டி.டி.வி.தினகரனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை விசாரணையை தள்ளிவைக்க டிடிவி தினகரன் கோரியிருந்தார். மனுவை விசாரித்த சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
டிடிவி தினகரன் மீது 1996ம் ஆண்டு அமலாக்கத்துறை 2 அந்நிய செலாவணி மோசடி தொடர்பாக வழக்குகளை பதிவு செய்தது. இது தொடர்பாக வழக்கு எழும்பூர் பொருளாதார நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அன்னிய செலாவணி மோசடி
1996ஆம் ஆண்டு, ஜெ.ஜெ. டிவிக்கு அப்லிங்க் சாதனங்கள் வாங்கியதில் மோசடி செய்ததாக, டி.டி.வி.தினகரன் மீது அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர்.
இது தொடர்பாக, டி.டி.வி.தினகரன் மீது ஏழு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து டி.டி.வி.தினகரனை நீதிமன்றம் விடுவித்தது. மேலும், ஐந்து வழக்குகள் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எழும்பூர் கோர்ட்டில் விசாரணை
இது தொடர்பான வழக்கு, எழும்பூர் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. ஆனால், டி.டி.வி.தினகரன் நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தல் பணியின் காரணமாக வழக்கை இன்னொரு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்
ஆர்.கே.நகர் தொகுதி வேட்புமனு மீதான பரிசீலனை உள்ளதால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி சனிக்கிழமை மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு விலக்களித்தது.
இந்நிலையில், தேர்தல் முடியும் வரை வழக்கை ஒத்திவைக்கக் கோரி தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதி பொருளாதார குற்றவியல் நடுவர் நீதிமன்ற நடுவர் மலர்மதி ஒத்திவைத்தார்.
டிடிவி தினகரன் மனு தள்ளுபடி
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது டிடிவி தினகரனின் மனுவை நீதிபதி மலர்மதி தள்ளுபடி செய்தார். வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்றும் டிடிவி தினகரன் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இடைத்தேர்தல் பிரச்சாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் டிடிவி தினகரன் வழக்கு விசாரணைக்கும் பிரச்சாரத்திற்கு மாறி மாறி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.