ராம்குமார் மரணத்தில் யாரையோ காப்பாற்றுகிறது அரசு... வழக்கறிஞர் சங்கர சுப்பு குற்றச்சாட்டு!
சென்னை: ராம்குமார் மரணத்தில் யாரையோ அரசு காப்பாற்ற முயற்சி செய்கிறது. உண்மையை வெளி கொண்டு வர போராடிக் கொண்டிருக்கிறோம் என்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் சங்கர சுப்பு கூறியுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம்குமாரின் பிரேத பரிசோதனை வழக்கு 3வது நீதிபதி கிருபாகரன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. 2 மணி நேரம் விசாரணை முடிவடைந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார் சங்கர சுப்பு. அப்போது அவர் பேசியதாவது:

பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தனியார் மருத்துவரை வைத்துக் கொள்வதற்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் உள்ளன. ராம்குமாரில் இறப்பில் மர்மம் இருப்பதால்தான் நாங்கள் தனியார் மருத்துவரை கேட்கிறோம். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரேவதி என்ற பெண்ணின் மரணம் குறித்த பிரேத பரிசோதனையில் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக அரசு மருத்துவர் முருகேசன் அறிக்கை அளித்தார். இதனை ஏற்க மறுத்தால் இன்னொரு மருத்துவர் பிரேத பரிசோதனை செய்து இறப்பிற்கு பிறகே மின்சாரம் பாய்ந்துள்ளது என்று அறிக்கை கொடுத்தார். இதன் பிறகு அந்த வழக்கின் போக்கே மாறியது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது. இதுபோல் பல்வேறு உதாரணங்கள் உள்ளன.
எனவே, தனியார் மருத்துவர் கண்டிப்பாக ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது இருக்க வேண்டும். தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வரும் என்று எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம். ராம்குமார் மரணத்தில் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்காமல் அரசு உண்மையை வெளி கொண்டு வர ஒத்துழைக்க வேண்டும் என்று சங்கர சுப்பு கூறினார்.












Click it and Unblock the Notifications