தொடர் மழை எதிரொலி: வேலூர் மாவட்டத்தில் வேகமாக நிரம்பிய ஏரிகள்
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் தொடரந்து பெய்து வரும் மழைக்கு 30க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வட கிழக்கு பருவ மழை தொடங்கியது முதல் தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் மாவட்டத்தில் வறட்சி நிலவி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
திருப்பத்தூர் பெரிய ஏரி, மாதனூர் பாலூர் ஏரி, ஆம்பூர் பெரியாங்குப்பம் ஏரி, ஆற்காடு கீரம்பாடி ஏரி என 30-க்கும் அதிகமான ஏரிகள் நிரம்பியுள்ளன.
ஐம்பதிற்கும் அதிகமான ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் உள்ள ஆண்டியப்பனூர் அணை, மோர்தானா அணை, ஆம்பூர் ஆனைமடுகு தடுப்பணை, ராஜாத்தோப்பு அணை ஆகியவை நிரம்பி வருகின்றன.
குளங்கள், சிற்றாறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்த அமிர்தி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.