முழுமையாக தடை விதிக்கவில்லை, விளக்கத்திற்குப் பின் இறுதி முடிவு ... சென்னை ஐஐடி பதிவாளர்
சென்னை: பெரியார் அம்பேத்கர் மாணவர் வட்டம் அமைப்பின் அங்கீகாரத்தை முழுவதுமாக ரத்து செய்யவில்லை என்றும், மாணவர் அமைப்பிடம் விளக்கம் கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப் படும் என்றும் சென்னை ஐஐடி பதிவாளர் பூமா தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் அம்பேத்கர் - பெரியார் வாசகர் வட்டம் என்ற மாணவர் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்தப் பிரச்சினை காரணமாக சென்னை ஐஐடி வளாகமே போராட்டக் களமாக மாறியுள்ளது. முன்னெச்சரிக்கையாக 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்த போதிலும், சென்னை ஐஐடி முன்பாக நேற்று காலை முதலே பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திரண்டனர்.
சுமார் 11 மணியளவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவர் அமைப்பின் அங்கீகாரத்தை முழுவதுமாக ரத்து செய்யவில்லை. மாணவர் அமைப்பின் விளக்கத்தை கேட்ட பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என சென்னை ஐஐடி பதிவாளர் பூமா விளக்கமளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications