காலதாமதத்திற்கு யார் காரணம்.. சூழ்ச்சியின் பின்னணி என்ன.. சசிகலா சொல்லும் விளக்கம்
ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க கால தாமதம் ஏன் என்பதற்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை சசிகலா தெரிவித்துள்ளார்.
சென்னை: பெண்கள் அரசியலில் இருப்பது ரொம்ப கஷ்டம் என்றும் தனக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும் வென்று மீண்டு வருவேன் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கூறியுள்ளார்.
முதல்வர் ஓபிஎஸ் பின்னாடி ஓடிவிடுவார்களோ என்ற அச்சத்தில், கூவத்தூர் சொகுசு ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களை 2வது முறையாக இன்று சசிகலா சந்தித்துப் பேசச் சென்றார்.
அப்போது சசிகலா செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சூழ்ச்சியின் பின்னணி
இரண்டு முறை தொடர்ந்து வென்று தமிழகத்தில் ஆட்சியை நடத்தி வருகிறது அதிமுக. நடக்கும் நிகழ்வுகளை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த சூழ்ச்சியின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
மர்மக் கடிதம்
நான் எழுதியதாகவே கடிதம் ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. நான் ஏதோ உயிரை விட்டுவிடுவேன் என்று ஆளுநருக்கு கடிதம் எழுதியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி பாருங்கள் என்றார். நான் அதனை கையில் எடுத்து வந்துள்ளேன். இதனை எல்லோரும் அவசியம் பார்க்க வேண்டும். இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை.
அரசியலில் பெண்
ஒரு பெண் அரசியலில் இருப்பது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். அதனை ஜெயலலிதா காலத்திலேயே நான் பார்த்திருக்கிறேன். அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்கள். இப்போது நான் பொதுச் செயலாளராக அதிமுகவில் பொறுப்பேற்றிருக்கிறேன். இந்த சோதனைகளில் இருந்து நான் மீண்டு வருவேன்.
அன்பான எம்எல்ஏக்கள்
ஜனநாயக வழியில் போராடுகிறோம். அதனை நம்புகிறோம். எங்களிடம் உள்ள அனைத்து எம்எல்ஏக்களும் என்னுடன் அன்போடு பழகுகிறார்கள். இப்போதும் நான் கூவத்தூர்தான் செல்கிறேன். நான் அவர்களோடு பேசிக் கொண்டிருக்கத்தான் போகிறேன்.
தொடரும் ஆட்சி
ஆட்சி அமைக்க கால தாமதம் ஏன் என்பதும் இன்று எம்பிக்கள் அங்கே ஏன் செல்கிறார்கள் என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். இதற்கு யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் என்பதும் தெரியும். நிச்சயம் அதிமுக ஆட்சி தமிழ்நாட்டில் இருக்கும். அடுத்த நான்கரை ஆண்டு காலமும் அதிமுக ஆளும். அது மக்களுக்காக செயல்படும் என்று சசிகலா கூறியுள்ளனார்.