கரூரில் 108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தல்?: பல கோடி பணத்தை பதுக்கி வைத்த அன்புநாதன் எங்கே?
கரூர்: சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதற்காக கரூரில் பலகோடி ரூபாய் பணத்தை குடோனில் பதுக்கி வைத்திருந்த நிதி நிறுவன அதிபர் அன்புநாதன் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் கடத்தப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கலங்கி போயிருக்கிறது கரூர் நகரம். காரணம் தோண்ட தோண்ட கோடிக்கணக்கில் பணம் சிக்குவதுதான். தமிழகத்திலேயே கரூரில்தான் அதிகபட்ச அளவில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையமே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதோடு கரூர் நகரையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளை யம் அடுத்த அய்யம்பாளையம் பகுதியில் உள்ள அன்புநாதன் குடோனில் பணம் பதுக்கப்பட்டிருப்பதாக, தேர்தல் கமிஷனுக்கு, 21ம் தேதி இரவு புகார் சென்றது. அதன்படி அன்றிரவு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இந்த தகவல், பதுக்கல் கும்பலுக்கு தெரிய வந்ததால் அவர்களும் உஷாராகி, பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை இடமாற்றம் செய்யும் தகவல் பரவியது.

வெள்ளிக்கிழமை அதாவது 22ம் தேதி காலை, ரெய்ட' நடத்த, கரூர் எஸ்.பி., வந்திதா பாண்டே தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள், அன்புநாதன் குடோனுக்கு சென்றனர். அங்கு, 10.33 லட்சம் ரூபாய் ரொக்கம்; நான்கு கார்; ஒரு டிராக்டர்; ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இருந்தும், மாவட்ட அதிகாரிகளின் உதவி இல்லாமல், வருமான வரித்துறை (புலனாய்வு பிரிவு) அதிகாரி மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள், நேற்று முன்தினம் மாலையிலிருந்து, நேற்று காலை வரை அன்புநாதனின் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பலகோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்
அன்புநாதன் குடோனில் இருந்து, 10.33 லட்சமும்; வீட்டில் இருந்து, 4.77 கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், 250 கோடி ரூபாய் அளவுக்கு ரொக்கம் பணம் கைப்பற்றி, தேர்தல் கமிஷனின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.
தொழிலதிபர் அன்புநாதன்
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அடுத்த, அய்யம்பாளையத்தை சேர்ந்த விவசாயி பெரியசாமி. 10 ஆண்டுகளுக்கு முன், கரூர் பாலிடெக்னிக் கல்வி நிறுவன பங்குதாரராக இருந்தார். அதிலிருந்து விலகிய பின், புதிதாக, நிதி நிறுவனம் துவங்கி, தன் மகன் அன்புநாதன், 42, பொறுப்பில் ஒப்படைத்தார். அவர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்களுக்கு பணம் சப்ளை செய்யும் பைனான்சியராக வலம் வருகிறார்.
அமைச்சர்களுடன் தொடர்பு
உள்ளூர், அ.தி.மு.க., பிரமுகரும், தன் சமூகத்தை சேர்ந்தவருமான செந்தில் பாலாஜியுடன் நட்புஏற்பட்டது. மேலும், திண்டுக்கல்லில் உள்ள அக்காவின் வீட்டுக்கு சென்று வரும்போது, அமைச்சர் நத்தம் விஸ்வநாதனிடமும் பழக்கம் ஏற்பட்டது. அவரது பணத்துக்கு பாதுகாப்பு கொடுப்பவராகவும், கொடுக்கல், வாங்கல் செய்யக்கூடியவராகவும் உயர்ந்துள்ளார்.
பண புழக்கம் உள்ள கரூர் பகுதி
நேற்று மட்டும் கரூரின் நிதி நிறுவன அதிபர் அன்புநாதன், அவரது நண்பர் மணிமாறன் உள்ளிட்ட 45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தியுள்ளனர். இது குறித்து கூறியுள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் கரூரில் பணம் மட்டுமின்றி, ஏராளமான சொத்து ஆவணங்கள், வேட்டி, சேலை மற்றும் பரிசுப் பொருட்களும், பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிசிடிவி கேமரா
கரூரில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை, வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அதில், பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்தக் கேமரா, வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்புலன்ஸ் மீது வழக்கு
அன்புநாதன் குடோனில் கைப்பற்றப்பட்ட ஆம்புலன்சில், 'நேஷனல் ஹெல்த் ரூரல் டெவலப்மென்ட் ஸ்கீம், கவர்ன்மென்ட் ஆப் இந்தியா' என, எழுதப்பட்டிருந்தது. அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் பதிவு எண் போலியாக இருந்ததால் வாகனத்தை கைப்பற்றி, வேலாயுதம்பாளையம் போலீ சார், வியாழக்கிழமையன்று வழக்குப்பதிவு செய்தனர்.
அதிகாரிகள் மறுப்பு
மேலும் ரெய்டு நடந்த போது, மற்றொரு ஆம்புலன்ஸ் வாகனமும், கரூர் நகர் பகுதியில் கைப்பற்றப்பட்டது. அந்த வாகனம் எங்கு உள்ளது; அதில் எவ்வளவுபணம் இருந்தது என்பதை அதிகாரிகள் கூற மறுத்துவருகின்றனர். அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்திய போது, அவரது வக்கீல்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நண்பரின் வீட்டில் சோதனை
இந்தநிலையில், அன்புநாதனின் நண்பர் மணிமாறன் குடோனுக்கு லாரியும், அதனைத்தொடர்ந்து சுமார் 10 கார்கள் வந்து சென்றுள்ளன. கடந்த சில நாட்களாகவே அப்பகுதியில் நடமாட்டம் அதிகம் இருந்த நிலையில் நேற்று லாரியும், 10 கார்களும் சென்றதை பார்த்த அப்பகுதி மக்கள் தேர்தல் தொடர்பான பணி பரிவர்த்தனை நடப்பதாக அதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து நேற்று அங்கு 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.
45 இடங்களில் சோதனை
கரூரில் அன்புநாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது, இந்திய தேர்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத அளவு பணம்' என்று கூறப்பட்டது. இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, 'அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும்' என, தகவல்கள் கிடைத்தன.
இதேபோல், தமிழகம் முழுவதும், பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக, சந்தேகிக்கப்பட்ட இடங்களில், நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அன்புநாதன் எங்கே?
இதனிடையே வருமான வரித்துறை அதிகாரிகள் அன்புநாதன் வீட்டில் சோதனை நடத்தி விட்டு நண்பர் மணிமாறன் வீட்டிற்கு சோதனைக்குச் சென்ற போது அவர்களின் பிடியில் இருந்து அன்புநாதன் மாயமாகிவிட்டதாக கூறப்படுகிறது. அன்புநாதன் மீது வழக்குப் பதிந்ந நிலையில் அதிகாரிகள் அவரை தப்பவிட்டதாக கூறப்படுகிறார். மாயமான அன்புநாதன் எங்கே போனார் என்பது இதுவரை தகவல் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications