சிக்கிய "சின்ன மீன்கள்".. குட்கா விவகாரத்தில் வழக்கு பதிவு.. அமைச்சர், டி.ஜி.பி பெயர்கள் இல்லை!
குட்கா ஊழல் விவகாரத்தில் நீதிமன்ற அறிவுறுத்தலையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
சென்னை: தமிழக அரசியல் களத்தையே புரட்டிப்போட்ட குட்கா ஊழல் விவகாரம் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பெயரில் முதல்கட்ட விசாரணையை முடித்துள்ள லஞ்ச ஒழிப்புத்துறை இந்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்துள்ளது.
சில தினங்களுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், மொத்தம் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆனால், தொடர்புடையவர்கள் என்று சொல்லப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், இரண்டு டிஜிபிக்களின் பெயர்கள் முதல் தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மொத்தம் உள்ள 17 பேரில், இரண்டுபேர் குட்கா குடோனின் புரோக்கர்களான மாதவராவ், ராஜேந்திரன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதேபோல், செங்குன்றம் காவல்துறை உதவி ஆணையர், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் ஆகியோர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. ஆனால் பெரிய மீன்களின் மீது நடவடிக்கை இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெளிவந்த குட்கா ஊழல்
அதேபோல், ஆகஸ்ட் 2016 ஆம் ஆண்டு செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோன்களில் வருமானவரித்துறை நடத்திய சோதனயில் ஏராளமான டைரிகள் கைப்பற்றப்பட்டது. அதில், தடையை மீறி குட்கா விற்பனை செய்ய அமைச்சர், டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணைக்கு அப்போதைய தலைமை செயலாளர் ராம மோகன ராவ், அப்போது டிஜிபியாக இருந்த அசோக்குமாருக்கு வருமானவரித்துறை கடிதம் அனுப்பினர். ஆனால், நடவடிக்கை இல்லை.

நீதிமன்றம் கண்டனம்
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் தொடுத்த வழக்கில், உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் வருமானவரித்துறை தரப்பில் கொடுத்த அறிக்கை வரவில்லை என்று தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். இவரது அறிக்கை மேலும் விவகாரத்தில் சூட்டை கிளப்பியது. இதையடுத்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கோப்பு மாயமான வழக்கை தனியாக விசாரிக்க உத்தரவிட்டனர்.

உயர் அதிகாரிகளிடம் விசாரணை இல்லை
இதுவரைக்கும் புரோக்கர்கள், சில அதிகாரிகளிடம் மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இன்னும் உயர் அதிகாரிகளிடமும், குற்றம்சாட்டப்பட்டுள்ள அமைச்சரிடமும் விசாரணை நடத்தவில்லை. கோப்பு மாயமான வழக்கில் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவுக்கு கேள்விகேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.

சில நாட்களில் அறிக்கை
இன்னும் சில தினங்களில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்யவுள்ளனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் இருக்கும் மூத்த அதிகாரி ஒருவர் திட்டமிட்டு இரண்டு ஆங்கில பத்திரிகைகளுக்கு மட்டும் இந்த செய்தியை கசியவிட்டுள்ளார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் நடவடிக்கையில் உயர்நீதிமன்றம் திருப்தியடையபோவதில்லை என்று கூறப்படுகிறது. முக்கியஸ்தர்களையும், உயரதிகாரிகளையும் ஏன் விசாரிக்கவில்லை என்று கேள்வி எழுப்ப வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. போகப்போக தெரியும்.. குட்கா ஊழல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கச் செய்வோம் என்கிறார்கள் எதிர்கட்சியினர்.












Click it and Unblock the Notifications