இடி, மின்னல்.. சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது. மின்னல் தாக்கியதால் இந்த தீ விபத்து நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவகாசி: சிவகாசி அருகே இடி, மின்னல் தாக்கியதால் தனியார் பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசியை அடுத்துள்ள மீனம்பட்டி, நாராயணபுரம், பெரிய வாடியூர், சின்ன வாடியூர், சதானந்தபுரம் பகுதியில் ஏராளமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் நாராயணபுரத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று மாலை திடீரென பயங்கரமாக மின்னல் தாக்கியது. இதில் பட்டாசு தயாரிக்கும் அறை தீப்பிடித்து எரிந்தது.
இதனால் ஏற்பட்ட தீயில் அங்கிருந்த கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பட்டாசுகள் எரிந்து நாசமாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிவகாசி தீயணைப்பு துறைக்கு தகவல் தரப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் கோவில்பட்டி அருகே உள்ள புதுக்கிராமத்தில் ஜெயசீலன் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி ஆலையில் மின்னல் தாக்கி தீ விபத்து நிகழ்ந்தது. இதில், குடோன் உள்ளே இருந்த தீக்குச்சிகளில் நெருப்பு மளமளவென பரவியது. இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால், தீயணைப்புத்துறையினர் விரைந்து வருவதற்குள், குடோனில் இருந்த பெரும்பாலான பொருட்கள் மற்றும் தீக்குச்சிகள் எரிந்து சாம்பலாயின. மின்னல் தாக்குதலின்போது, குடோனில் ஊழியர்கள் இல்லாததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.