சென்னை: தனியார் நிறுவனத்தில் தீ விபத்து- உடல் கருகி 4 பேர் பலி
சென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில், பாலிதீன் மூலப்பொருட்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், நான்கு ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவேற்காடு, காடுவெட்டியில் பாலிதீன் பை தயார் செய்ய பயன்படும், ஜிப்ஸ் என்ற மூலப்பொருள் உற்பத்தி செய்யும், ராஜகனி டிரேடர்ஸ் என்ற நிறுவனம் உள்ளது.அங்கு, 10 பெண்கள் உள்ளிட்ட 16 பேர் பணி புரிகின்றனர்.
புதன்கிழமையன்று பணி முடிந்து, பெண்கள் உள்ளிட்ட, 11 பேர் வீடு திரும்பினர். நிறுவன வளாகத்தினுள், இரும்பு தகட்டால் வேயப்பட்ட ஒரு அறைக்குள், ரகுகுமார், 26, சரத்குமார், ராஜா, 26, அம்ரா, 25, ஆகிய நான்கு பேரும், தூங்கிக் கொண்டிருந்தனர். மற்றொரு பணியாளர், திருச்செந்தூரைச் சேர்ந்த சித்திரவேல் என்பவர், பாதுகாவலர் அறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.
நால்வர் பலி
இந்த நிலையில் இரவு, 12:30 மணிக்கு, நிறுவன வளாகத்தினுள், திடீரென தீப்பிடித்தது. பிளாஸ்டிக் மூலப்பொருட்கள் என்பதால் தீ மளமளவென ஊழியர்கள் தூங்கிய அறையிலும் பரவியது. அப்போது, இரும்பு மேற்கூரை பெயர்ந்து, அவர்கள் மீது விழுந்ததில், சம்பவ இடத்திலேயே, நால்வரும் கருகி பலியாகினர்.
சிதறிய கண்ணாடிகள்
அதன் அருகே உள்ள கிரானைட் நிறுவனத்திலும், தீ பரவியது. அங்கு ஆட்கள் யாரும் இல்லை. அந்த நிறுவனத்தின் கண்ணாடிகள் வெடித்து சிதறின. அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, தீயில் சிக்கி எலும்புக் கூடானது.
தீயணைப்பு வீரர்கள்
பூந்தமல்லி, ஆவடி, அம்பத்தூரில் இருந்து நான்கு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், நான்கு மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். சடலங்களை மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ விபத்து தொடர்பாக, நிறுவனத்தின் உரிமையாளர் இமானுவேல், நேற்று கைது செய்யப்பட்டார்.
கொசுமூட்டம்
இதுகுறித்து, திருவேற்காடு போலீசார் முதல்கட்ட விசாரணையில், 'நிறுவனத்தில் கொசு கடியால் அவதிப்பட்ட ஊழியர்கள், குப்பையை கொளுத்தி மூட்டம் போட்டனர். அதில் இருந்து பரவிய தீயால், நிறுவனம் முழுக்க பரவி தீக்கிரையானது. அதில், சிக்கிய நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
ஜவுளிக்கடை கிடங்கில் தீ விபத்து
இதனிடையே தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில், தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது.
பிளாஸ்டிக் கிடங்கு
தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான அந்த வணிக வளாக கட்டிடத்தின் 4வது மாடியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் இன்று அதிகாலை திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
8 பேர் காயம்
அப்போது, அந்த தளத்தில் 8 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதுடன் பலத்த காயமும் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
17 தீயணைப்பு வண்டிகள்
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து 17 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீயை அணைக்கும் பணியில் சென்னை மாநகராட்சியின் 5 தண்ணீர் லாரிகளும் ஈடுபட்டன.
மின்கசிவு
மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த தீ விபத்தில், அந்த கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications