சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் பயங்கர தீ... நோயாளிகள் ஓட்டம்
சென்னை: சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையின் முதல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இருப்பினும் உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
மருத்துவமனையின் முதல் தளத்தில் மருத்துவப் பொருட்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை இருந்த கிடங்கில் தீப்பிடித்தது. இந்த தீ இரண்டாம் தளத்திற்கும் பரவியது.
இதனால் நோயாளிகள், மற்றும் அவர்களது உறவினர்கள் அலறியடித்து வெளியேறினர். மற்றவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 8 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும், பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்த விபரங்களை வெளியிட ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.