நெருங்கி வரும் தீபாவளி.. விற்பனையில் ஜோராய் பட்டாசுகள் - 4599 கடைகளுக்கு தீயணப்புத்துறை அனுமதி!
சென்னை: தமிழகம் முழுவதும் 4599 பட்டாசுக் கடைகள் திறப்பதற்கு தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், வியாபாரிகள் பட்டாசு கடைகள் திறப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்காக தீயணைப்புத்துறையினரிடம் அனுமதி பெறுவதற்கு வியாபாரிகள் விண்ணப்பித்த வண்ணம் உள்ளனர்.

குதூகல தீபாவளி:
சிறியவர் முதல் பெரியவர் வரை தீபாவளி திருநாளை குதூகலமாக கொண்டாடுவதில், பட்டாசு முக்கிய பங்கு வகிக்கிறது. சிவகாசியில் உள்ள சுமார் 800க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தாண்டு பல்வேறு விதமான புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பல வண்ண ரகங்களில் தயாராகியுள்ள இந்த பட்டாசுகள், தீபாவளி அறிமுகமாக சந்தைக்கு வரவுள்ளன.

புதிய பட்டாசு ரகங்கள்:
பல வண்ணங்களை உமிழும் வான வேடிக்கைகளும், வித்தியாசமாக ஒலிகளை எழுப்பும் வெடிகளும் இந்தாண்டு சிறுவர்களை குறி வைத்து சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளன.

கலர் கலராய் வர்ண ஜாலம்:
தரைச்சக்கரம், பூச்சட்டி, ஹரிபாட்டார் மேஜிக் பட்டாசுகளை சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் போன்ற வடிவங்களில் செய்துள்ளதாகவும், அதிகளவில் இந்தாண்டு புதுமையாக செய்யப்பட்டுள்ளதால் பட்டாசின் மோகம் மக்களிடையே அதிகளவில் உள்ளது.

கடைகளுக்கு அனுமதி:
இந்தாண்டு இன்று வரை 5609 கடைகள் திறப்பதற்கு வியாபாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 4599 கடைகள் திறக்க தீயணைப்புத்துறை அனுமதி வழங்கியுள்ளது. 847 விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. 163 விண்ணப்பங்களை தீயணைப்புத்துறை நிராகரித்துள்ளது. தீபாவளி நெருங்கி வரும்போது, பட்டாசு கடைகள் திறப்பதற்கு இன்னும் வியாபாரிகள் விண்ணப்பிப்பார்கள் என தீயணைப்புத்துறையினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications