தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: பெரும் சேதம் தவிர்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தூத்துக்குடி தெர்மல் நகர் பகுதியில் அனல் மின் நிலையம் உள்ளது. இந்த அனல் மின் நிலைய வளாகத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் நிலக்கரி ஆங்காங்கே குவித்து வைக்கப்படுவது வழக்கம். ஏராளமான கழிவுப் பொருள்களும் வளாகத்தில் உள்ள பகுதியில் தனியே வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த நிலக்கரியில் இருந்து நேற்று பிற்பகலில் புகைமூட்டம் கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் நிலக்கரி மட்டுமன்றி அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த கழிவுப் பொருள்களும் தீப்பற்றி எரியத் தொடங்கின. இதனால், அனல் மின் நிலையத்தைச் சுற்றி புகைமூட்டமாக காணப்பட்டது.

இதைடுத்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தெர்மல் நகர், தூத்துக்குடி, சிப்காட் மற்றும் ஸ்பிக், கனநீர் ஆலை, ஸ்டெர்லைட், துறைமுகம் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. ஏறத்தாழ 5 மணிநேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications