தமிழ்நாட்டின் முதல் "லுலு ஹைப்பர்" மார்க்கெட் கோவையில்..அடுத்ததாக சென்னை.. கிளம்பி வந்த விக்கிரமராஜா
கோயம்புத்தூர்: தமிழ்நாட்டின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையிலும் லுலு வரப்போகிறதாம்.. இதுகுறித்த முக்கிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.
வரும் 2024ம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்தது.. இதற்கு காரணம், சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ச்சி பெற்று வருவது கோவைதான்..
தொழில்துறையாகட்டும், கல்வியாகட்டும், மருத்துவ துறையாகட்டும், அனைத்திலுமே கோவை முன்னேறி வருகிறது.. அதனாலேயே கோவையில் லுலு மால்களை கட்ட முடிவானது.. கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்தது.. லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடித்து, கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
டிபார்ட்மென்ட்: ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன..
20-க்கும் மேற்பட்ட பில்லிங் கவுண்டர்கள் இருந்தபோதிலும், வரக்கூடிய மக்களை சமாளிக்க முடியாத அளவில் கூட்டம் இருப்பதால் பொருட்களை ஷாப்பிங் செய்தாலும் பில்லிங் போடுவதற்கு உள்ள வரிசைகளை பார்த்து கஸ்டமர்கள் பயந்தார்கள்.. அந்த அளவுக்கு இந்த லுலு மால். விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதனால், மற்ற நகரத்திலுள்ள மற்ற ஷாப்பிங் மார்க்கெட்டுகள், மால்களில் கூட்டம் குறைந்து காணப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை: ஆனால், வார நாட்களில் லுலு மாலுக்கு வரும் கூட்டம் சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றாலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.. இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்..
"கோவை மாவட்ட மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் ஆகிய 2 இடங்களில் உணவு பதப்படுத்தும் மையம் அமைய உள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க, லு லு நிறுவனம் திட்டங்களை செயல்படுத்தவுள்ளது. சென்னையிலும் மால் துவங்கப்படும்... தஞ்சாவூர் பகுதியில் "மார்டன் ரைஸ் மில்" அமைத்து, சர்வதேச அளவில் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய திட்டமுள்ளது. தற்சமயம், கோவை பகுதிகளில் 700 பேருக்கு கோவையில் ஹைப்பர் மார்க்கெட்டில் வேலைவாய்ப்பு தரப்பட்டுள்ளது" என்றார்.
புகார் மனு: மற்ற மாவட்டங்களிலும் லுலு கால் பதிக்க போவதாக கூறியுள்ளதற்கு, வணிகர்கள் சங்கம் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தது.. இது தொடர்பாக முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடவும் விக்கிரமராஜா ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விடமாட்டோம்: கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட "லூலூ மால்" ஹைப்பர் மார்க்கெட், அடுத்தடுத்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் திறக்கும் நிலையில், சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.. சென்னையில் லுலு மால் திறக்க இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் இங்கு திறக்க அனுமதிக்க மாட்டோம்.. வணிகர்களின் தற்கொலை, மனித உரிமை மீறல்கள் பாதிப்புகள் இனி எங்கும் நடக்காது, அதற்கான குழு அமைத்து தீவிரமாக கண்காணிப்போம்" என்றார் விக்கிரமராஜா.












Click it and Unblock the Notifications