மதுரை எய்ம்ஸ்... ஒத்த வெற்றிக்கே 4 வருஷம்.. மொத்த வெற்றிக்கு எத்தனை வருஷமோ!
எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமையும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மதுரை: தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துவிட்டதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 4 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தோப்பூரில் இப்போது வந்துவிடும், அப்போது விடும் என்று மத்திய, மாநில அரசுகள் தரப்பில் சொல்லப்பட்டு வந்தது.

டெண்டரே விடவில்லை
ஆனால் 2 தினங்களுக்கு முன்பு, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இதுவரை எந்த ஒப்புதலும் அளிக்கவில்லை என ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த மருத்துவமனை அமைய இதுவரை ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவும் இல்லை, மருத்துவமனை கட்டடங்கள் அமைக்க இதுவரை டெண்டர் எதுவும் விடப்படவும் இல்லை என வெட்ட வெளிச்சமானது.

மீண்டும் நம்பிக்கை
இதையடுத்து மத்திய, மாநில அரசு தரப்பிலிருந்து நம்பிக்கை வார்த்தைகள் எழ ஆரம்பித்துள்ளன. அதிமுக தரப்பில் எம்.பி. தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தரப்பில் தமிழிசை உள்ளிட்டோர் மதுரைக்கு எய்ம்ஸ் வந்தே தீரும் என சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அந்த வரிசையில் தற்போது அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் கருத்து தெரிவித்துள்ளார்.

பின்னடைவா?
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது தவறு என்று தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட வெற்றி
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் தேர்வு, மண் பரிசோதனை, உள்ளிட்ட மத்திய அரசு விதித்த 5 நிபந்தனைகளை நிறைவேற்றியதுதான் முதல்கட்ட வெற்றி எனவும், இதேபோல அடுத்த கட்ட வெற்றியையும் பெறுவோம் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். முதல்கட்ட வெற்றிக்கே 4 ஆண்டு காலம் என்றால் மொத்த வெற்றியையும் பெற எத்தனை காலம் காத்திருக்க வேண்டுமோ????












Click it and Unblock the Notifications