வாய்க்கு ருசியா வஞ்சிம் மீன் சாப்பிட முடியலையே... ஏறி வரும் விலையால் மக்கள் அவதி!
சென்னை: சென்னையில் இடையில் சற்று மீன் விலை குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் விலை உயர்ந்து வருவதால் மக்கள் வாய்க்கு ருசியாக பிடித்த மீனை வாங்கிச் சாப்பிட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் கோழிக்கறி, ஆட்டுக்கறி பக்கம் மக்களின் வாய்கள் திரும்பி வருகின்றன.
குறிப்பாக அனைத்து வயதினரும் ஆசை ஆசையாக சாப்பிடும் வஞ்சிரம் மீன்தான் அதிக விலை உயர்வைக் கண்டுள்ளது.

காசிமேடு...
காசிமேடுதான் சென்னை நகரின் முக்கிய மீன் மார்க்கெட் ஆகும். இங்குதான் பல பகுதிகளிலிருந்து பிடித்து வரப்படும் மீன்கள் விற்பனைக்கு வைக்கப்படும். இங்கு வந்துதான் பெரும்பாலான வியாபாரிகள் மீன்களை வாங்கி விற்பனை செய்வது வழக்கம்.

வெளிமாநில மீன்களும்
இதுபோக வெளிமாநிலங்களிலிருந்தும் கூட மீன்கள் வருகின்றன. இவையும் சென்னையின் பல்வேறு பகுதிகளின் முக்கிய மீன் மார்க்கெட்களில் விற்பனைக்கு வைக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் 10 ஆயிரம் டன் விற்பனை
சென்னையில் வார நாட்களில் 6000 டன் மீன் வரை விற்பனையாகும். இதுவே ஞாயிற்றுக்கிழமைகளில் 10,000 டன் வரை போகும்.

விலை உயர்வு
ஆனால் சமீப நாட்களாக மீன் விலை உயர்ந்தவண்ணம் உள்ளது. பெரிய வஞ்சிரம் மீன் கிலோ ரூ. 700 வரை விற்கிறது. இதுவே சில்லறைக் கடைகளில் ரூ. 1000 வரை போய் விடுகிறது. சிறிய மீன் ரூ. 450க்கு விற்பனையாகிறது.

நெத்திலி, பாரை சகாயம்
நெத்திலி மீனும், பாரை மீனும் தான் சற்று குறைவாக உள்ளன. இவை முறையே கிலோ ரூ. 150, 170 என்று விற்கின்றன.

தேங்காய் பாரை ஓ.கே.
வஞ்சிரம் மீன் வாங்கதாவர்கள் பெரும்பாலும் தேங்காய்ப் பாரை மீனை வாங்குவார்கள். இதில் சற்று முளை குறைவாக இருக்கும். இதன் விலை கிலோவுக்கு ரூ. 250 வரை உள்ளது. சீலா மீனும் கூட இதே விலைதான்.

விலை உயர்வால் சிக்கனுக்கு கிராக்கி
மீன் விலை அதிகமாக இருப்பதால் அதை விட சற்று விலை குறைவாக உள்ள கோழிக்கறிக்கு மக்கள் அதிக ஆதரவைக் காட்டி வருகின்றனராம்.












Click it and Unblock the Notifications