குமரியில் நடுக்கடலில் மோதிக்கொண்ட மீனவர்கள் – 2 கிராமங்களில் பதட்டம்
குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுக்கடலில் மீனவர்களின் மோதிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தைச் சேர்ந்த ராஜூ என்ற கிறிஸ்துராஜ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
கன்னியாகுமரியில் இருந்து 7 நாட்டிக்கல் தொலைவில் கூட்டப்புளி கடல் பகுதியில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களது விசைப்படகில் சிக்கி கூட்டப்புளி மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகள் அறுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் கிடைத்ததும் 4 படகுகளில் கூட்டப்புளி மீனவர்கள் கடலுக்கு விரைந்தனர்.
அந்த மீனவர்களுக்கும், சின்னமுட்டத்தில் இருந்து சென்ற மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சின்னமுட்டம் மீனவர்கள் தங்களது மீன்பிடி வலை மற்றும் உபகரணங்களை கடலில் போட்டு விட்டு சின்னமுட்டத்துக்கு வந்து விட்டனர்.
இந்த மோதலால் இரு மீனவ கிராமங்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.