ஓகியில் சிக்கியவர்களை மீட்கக் கோரி குமரியில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!!
ஓகி புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்கக் கோரி கன்னியாகுமரியில் கடலில் இறங்கி ஆயிரக்கணக்கான மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி: ஓகி புயலின்போது மாயமான மீனவர்களை மீட்கக் கோரி 12 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மீனவர்கள் குமரி கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 9 நாள்களுக்கு முன்பு ஓகி புயலின்போது சிக்கிய ஆயிரக்கணக்கான மீனவர்கள் கரை சேரவில்லை. இவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் தஞ்சமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை மீட்பதற்கு மத்திய- மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நீரோடி உள்ளிட்ட இடங்களிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன.
இவர்களுக்கு ஆதரவாக கடலூர், மரக்காணம் ஆகிய இடங்களில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 4- 5 நாள்களாக போராடியும் மத்திய- மாநில அரசுகள் மவுனம் காத்து வருவதால் காணாமல் போன மீனவர்களை காப்பாற்றக் கோரி தடியப்பட்டணம் முதல் பள்ளம் வரையில் 12 கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவிலில் கடலில் இறங்கி 3000 மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.