மீன் பிரியர்களுக்கு நல்ல செய்தி.. தடைக்காலம் முடிகிறது.. மீன் வரத்து அதிகரிக்கும்
நாளையோடு மீன்பிடி தடைக்காலம் முடிவடைவதால் மீன்பிடிக்க தமிழக மீனவர்கள் தயராகி வருகின்றனர்.
நாகப்பட்டினம்: மீன்பிடி தடைக்காலம் நாளை முடிவடைவதை தொடர்ந்து மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தயார் நிலையில் விசைப்படகு மீனவர்கள் உள்ளனர்.
மேலும் மீன்பிடி படகுகளில் டீசல், ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1983ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் உட்பிரிவுகளின் கீழ் கடலில் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தமிழ்நாட்டின் கிழக்கு கடல் நெடுகிலும் மீன்பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வங்கக் கடலோரைப் பகுதி முழுவதிலும், அதாவது திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரி கடற்பகுதி வரையில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி வரை 45 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இந்த மீன்பிடி தடைக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டு ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாளை நள்ளிரவு முதல் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல உள்ளனர்.