சேலம்: படுவேகத்தில் வந்த மணல் லாரி பஸ், பைக் மீது மோதி 5 பேர் பலி
சேலம்: சேலம் அருகே சந்தியூர் புதுரோட்டில் மணல் ஏற்றி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து தனியார் பஸ், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக பலியாயினர். படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நாமக்கல்லுக்கு புறப்பட்ட தனியார் பேருந்து நேற்று காலை சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சந்தியூர் அருகே சென்றது. அப்போது எதிரே திருச்சியில் இருந்து சேலம் நோக்கி வந்த மணல் லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்பை உடைத்துக் கொண்டு, மறுபுறம் சென்றுகொண்டிருந்த பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது.

விபத்தில், பேருந்தில் பயணம் செய்த கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த லாரி கிளீனர் குமார் (30), சேலம் ஓமலூர் காமலாபுரத்தைச் சேர்ந்த பூர்ணிமா (21) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

தடுப்பை உடைத்துக் கொண்டு லாரி வந்தபோது எதிர்புறச் சாலையில் வந்த இரு சக்கர வாகனம், லாரியின் கீழே சிக்கியது. அதில் சேலம் கொண்டலாம்பட்டி சுண்ணாம்புக்காரத் தெருவைச் சேர்ந்த ராஜா (28), அவரது மனைவி சரோஜா (26), ஒன்றரை வயது பெண் குழந்தை தனலட்சுமி ஆகிய மூவரும் சம்பவ இடத்தில் உடல் நசுங்கி இறந்தனர்.

விபத்தில் காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர் அன்பழகன் தனியார் மருத்துவமனையிலும் மற்றும் 5 பேர் சேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications