கோவையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பலாத்காரம் செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை
கோவை: வால்பாறையில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 56 வயது நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாகமலை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் வேலாயுதம்(56). அவரது வீட்டிற்கு அருகே மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி வசித்து வந்தார். கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை வேலாயுதம் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இது குறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலாயுதத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி ராஜா வேலாயுதத்திற்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளார். அபராத தொகையை செலுத்த தவறினால் வேலாயுதம் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.