ப்ளாஷ் பேக்: களைகட்டும் உள்ளாட்சி தேர்தல்... 2011-ல் தனித்தே களம் கண்ட கட்சிகள்
சென்னை: தமிழகத்தில் மினி சட்டசபை தேர்தலாக கருதப்படும் உள்ளாட்சித் தேர்தல் களைகட்டத் தொடங்கியுள்ளது. 2011 தேர்தலைப் போல அல்லாமல் இம்முறை அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணிகளோடு களமிறங்குகின்றன.
சட்டசபை தேர்தலில் அதிமுக சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து அக்கட்சி வேட்பாளர்களையும் இரட்டை இலை சின்னத்தில் நிற்க வைத்தது. திமுகவோ காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்டவைகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டது.
தேமுதிக, மதிமுக, தமாகா, விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள் இணைந்து ஓரணியில் நின்றன. பாமக, நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன.
பாஜகவும் ஒரு மெகா கூட்டணிக்கு முயற்சித்தது. ஆனால் இந்திய ஜனநாயகக் கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. ஆனால் தேர்தலில் அதிமுக, திமுக, காங்கிரஸ் தவிர்த்த இதர கட்சிகள் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. அதிமுக ஆட்சியைத் தக்க வைத்தது. திமுக பிரதான எதிர்க்கட்சியானது.
தங்களது கணிசமான வாக்கு சதவீதத்தையும் டெபாசிட்டையும் பிறகட்சிகள் பறிகொடுத்தன. சட்டசபை தேர்தல் சூடு ஆறிய நிலையில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17,19 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க அரசியல் கட்சிகள் தீவிர வியூகம் வகுத்து வருகின்றன. திமுக, சட்டசபை தேர்தலில் கைகோர்த்த கூட்டணிகளோடு இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரையில் வழக்கம் போல சிறு கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும்.
மக்கள் நலக் கூட்டணியில் இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் இணைந்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்துள்ளன. தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சிகள் தனித்தே போட்டியிடக் கூடும்.
சரி... 2011-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் களம் எப்படி இருந்தது? என்பது பற்றிய ஒரு ப்ளாஷ்பேக்கை பார்ப்போம்:

தனித்து போட்டியிட்ட அதிமுக
கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள் இணைந்த ஒரு கூட்டணி அமையும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அதிமுகவோ அதிரடி காட்டி தேமுதிக, இடதுசாரிகளை கடைசிவரை காக்க வைத்து வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதிமுக தனித்தே களமிறங்கியது..

தேமுதிக- மார்க்சிஸ்ட்
அதிமுகவுடனான கூட்டணி அமையாமல் ஏமாற்றம் அடைந்த தேமுதிகவும் மார்க்சிஸ்ட் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்தே தேர்தலை எதிர்கொண்டது.

தனித்து களம் கண்ட திமுக
இதேபோல் திமுகவும் காங்கிரஸை கழற்றிவிட்டு தனியே உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தது. இன்னும் சொல்லப் போனால் திமுக தனித்து இறங்குவதாக முதலில் அறிவித்ததால் இதற்குப் போட்டியாக அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளை கழற்றிவிட்டு தனித்து களமிறங்கியது.

பாமக
பாமக தம்முடைய அணியில் விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற வேண்டும் என்று தீர்மானமே போட்டார்கள். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள், பாமகவுடன் கூட்டணிக்குப் போகவில்லை; அதே நேரத்தில் இணக்கமான போக்கை கடைபிடித்தது. இதனால் தாங்கள் போட்டியிடாத இடங்களில் விடுதலைச் சிறுத்தைகளை ஆதரிப்போம் என பாமக அறிவித்தது.

மதிமுக
மதிமுக, இடதுசாரிகளை ஒருங்கிணைத்து ஒரு கூட்டணிக்காக முயற்சியை தேமுதிக விரும்பியது. ஆனால் மதிமுக அப்போது பிடிகொடுக்காமல் தனியே தேர்தலை சந்திப்பதாக அறிவித்து களமிறங்கியது.

வி.சிறுத்தைகள்
மாற்று அரசியலுக்கு முன்னோட்டமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியானது முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ கட்சிகள், அமைப்புகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. திமுக, அதிமுக அல்லாத கட்சிகள் ஓரணியில் திரட்ட விடுதலைச் சிறுத்தைகள் முயற்சித்தும் பலனளிக்காமல் போனதால் இந்த முயற்சியை அக்கட்சி மேற்கொண்டது.

காங்கிரஸ்
திமுகவால் கழற்றிவிடப்பட்ட காங்கிரஸ் கட்சி தனித்தே போட்டியிட்டது. இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாரதிய ஜனதா ஆகியவையும் தனித் தனியே களம் கண்டன.
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய மனிதநேய மக்கள் கட்சியும் தனித்தே போட்டி என அறிவித்தது. புதிய தமிழகம் கட்சியும் தனித்தே களம் கண்டது.

பிற கட்சிகள்...
இவை தவிர ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய ஜனநாயக கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக், புரட்சி பாரதம், தேசியவாத காங்கிரஸ் ஆகியவையும் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டன.












Click it and Unblock the Notifications