2015ல் ஜனவரி: "வரலாறு" படைக்க வந்த குமாரசாமி.. 11வது முறையாக தலைவரான கருணாநிதி!
சென்னை: இதற்கு முன்பு இருந்த ஆண்டுகளைப் போலவே பல மறக்க முடியாத நிகழ்வுகளை நமக்கு அளித்து விட்டு விடை பெறுகிறது 2015ம் ஆண்டும்.
இந்த ஆண்டும் நம்மால் மறக்க முடியாத ஆண்டு. அப்படிப்பட்ட அழுத்தமான நினைவுகளுடன் விடை பெறப் போகும் இந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகளை சற்றே திரும்பிப் பார்க்கலாம்.
2015ம் ஆண்டு பிறந்தது முதல் முடியும் வரை பல மறக்க முடியாத நிகழ்வுகளைக் கண்டோம். அதிலிருந்து சில...

திட்டக் கமிஷனுக்கு டாட்டா
ஜனவரி 1ம் தேதி திட்டக் கமிஷனுக்கு மூடு விழா கண்டது மத்திய அரசு. புதிதாக நிதி ஆயோக் உருவாக்கப்பட்டது. அதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

யுவன் ஷங்கர் திருமணம்
ஜனவரி 1ம் தேதி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மதம் மாறி ஜெபருன்னிசாவை திருமணம் செய்து கொண்டார்.

ஜெ. வழக்கும், நீதிபதி குமாரசாமியும்
ஜனவரி 2ம் தேதி சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த அப்பீல் மனுக்களை நீதிபதி குமாரசாமி விசாரிப்பார் என கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்தது.

சுனந்தா கொலை செய்யப்பட்டார்
ஜனவரி 6ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்யவில்லை மாறாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பஸ்ஸி தெரிவித்தார்.

சார்லி ஹெப்டோ தாக்குதல்
ஜனவரி 7ம் தேதி பாரீஸில் உள்ள சர்ச்சைக்குரிய சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலத்திற்குள் புகுந்த தீவிரவாதிகள் நடத்திய அதிரடித் தாக்குதலில் நான்கு கார்ட்டூன் கலைஞர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

11வது முறையாக தலைவரான கருணாநிதி
ஜனவரி 9ம் தேதி திமுக தலைவராக கருணாநிதி 11வது முறையாக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு புதிய வரலாறு படைத்தார்.

பாஜகவில் கிரண் பேடி
ஜனவரி 16ம் தேதி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

மன்னர் அப்துல்லா மரணம்
ஜனவரி 23ம் தேதி சவூதி அரேபிய மன்னர் அப்துல்லா தனது 90 வயதில் மரணமடைந்தார். தனது கடைசிக்காலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உத்தரவைப் பிறப்பித்தவர் மன்னர் அப்துல்லா.

வி.எஸ்.ராகவன் மரணம்
ஜனவரி 24ம் தேதி பழம்பெரும் நடிகர் வி.எஸ். ராகவன் தனது 89வது வயதில் இன்று காலமானார்.

குடியரசு தின விழாவில் ஒபாமா
ஜனவரி 26ம் தேதி இந்தியக் குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஒருவர் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது இதுவே முதல் முறையாகும்.

ஜெயந்தி நடராஜன் விலகல்
ஜனவரி 30ம் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்தினார்.












Click it and Unblock the Notifications