இளைஞர் மூளைச்சாவு: கொச்சியில் இருந்து சென்னைக்கு பறந்து வந்த இதயம்
சென்னை: கேரளாவில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் ஒன்று கொச்சியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை பெற்ற நோயாளிக்கு பொருத்தப்பட்டது.
கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த பிரணவ் (வயது 19) என்பவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது இதயம் மற்றும் நுரையீரலை தானம் செய்ய உறவினர்கள் முன் வந்தனர். பிரணவின் இதயம் சென்னையைச் சேர்ந்த நோயாளிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.

இந்த தகவல் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் உடனே இதயத்தை தானம்பெறும் நோயாளியை தயார்படுத்தினர். அதே நேரம் கொச்சியில் பிரணாயின் உடலில் இருந்து அவரது இதயம் மற்றும் நுரையீரலை அகற்றும் ஆபரேசனும் தொடங்கியது. உடலில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதும் அவற்றை பத்திரமாக பாதுகாத்து விமானம் மூலம் சென்னை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.
கொச்சி டூ சென்னை
காலை 11.54 மணி அளவில் கொச்சியில் உள்ள லேக்ஷோர் மருத்துவமனையில் இருந்து ஒரு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்ட இந்த உறுப்புகள் 34 கிலோ மீட்டர் தூரம் உள்ள நெடும்பசேரி விமான நிலையத்தை 25 நிமிடங்களில் வந்தடைந்தது. சென்னை வந்ததும், விமான நிலையத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய ஏற்பாடுகளை சென்னை மருத்துவமனை நிர்வாகத்தினர் ஏற்கனவே செய்திருந்தனர்.
பறந்து வந்த இதயம்
கொச்சியில் இருந்து பிரணாயின் இதயமும், நுரையீரலும் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது. அங்கிருந்து சுமார் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து அந்த இதயத்தை நோயாளியின் உடலில் பொருத்தும் அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
உடல் உறுப்பு தானம்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாறசாலையைச் சேர்ந்த வக்கீல் ஒருவரின் இதயம் மற்றும் நுரையீரல் போன்றவை கொச்சியில் உள்ள ஆட்டோ டிரைவருக்கு தானமாக வழங்கப்பட்டது. குறைந்த நேரத்தில் தரை வழியாக உடல் உறுப்புகளை எடுத்துச் சென்றால் நேரமாகும் என்பதற்காக ராணுவ விமானம் மூலம் இந்த உறுப்புகள் திருவனந்தபுரத்தில் இருந்து கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.
விழிப்புணர்வு அதிகரிப்பு
இதுபற்றிய தகவல் வெளியானதை தொடர்ந்து, கேரளாவில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதோடு, மூளைச் சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை உறவினர்கள் தானம் செய்வதும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications