கனமழையால் குற்றால அருவிகளில் திடீர் வெள்ளபெருக்கு... குளிக்க தடை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!
குற்றாலம்: திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நேற்று குற்றால அருவிகளில் குளிக்கத் திடீர் தடை விதிக்கப் பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளானார்கள்.
அருவி என்றாலே நம் அனைவரது மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது குற்றாலம் தான். இது குற்றால அருவிகளில் நீர் வரத்து அதிகமுள்ள காலமாததால், சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில், குற்றாலத்தில் இரண்டு தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று இரவு அங்குள்ள அருவிகளில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவிகளில் குளிக்க திடீர் தடை அறிவிக்கப்பட்டது.
மழை....
குற்றாலத்தில் ஜூன் மாதம் சாரல் ஏமாற்றிய நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் கண்ணாமூச்சி காட்டி வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக குற்றாலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது.
சாரல்...
குறிப்பாக அதிகாலை வேளையில் சாரல் நன்றாக பெய்தது. தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் வெயில் தலை காட்டவே இல்லை. சாரல் காரணமாக அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. காலையில் மெயின் அருவியின் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்தது.
தடை...
இதனால், சுமார் 3 மணி நேரம் மெயின் அருவியில் குளிக்க திடீர் தடை விதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளப்பெருக்கு ஓரளவுக்கு குறைந்த பின்னர் ஓரு ஒரமாக நின்று குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகள்...
ஐந்தருவியில் ஐந்து பிரிவுகளிலும், பழைய குற்றாலம், புலியருவியிலும், சிற்றருவியிலும் தண்ணீர் நன்றாக விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.