வெள்ள நிவாரணம் கேட்டு, நாகை, விழுப்புரம், திருவாரூர், மாவட்டங்களில் போராட்டம், சாலை மறியல் !
விழுப்புரம்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர் மாவட்ட மக்கள் நிவாரணம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக தொடர்ந்து பெய்த கனமழைக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டன. பெருக்கெடுத்த வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. இதனால் டி.வி. பிரிட்ஜ், வாஷிங்மெசின், கார், ஏசி, டூவிலர் என வீடுகளில் இருந்த ஒட்டு மொத்த பொருட்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. ஏராளமானோர் வீடுகளை இழந்தும், உடைமைகளையும் இழந்து தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகஅரசு, பல்வேறு அரசியல் கட்சியினர் தன்னார்வ தொண்டு நிறுவனம், நடிகர், நடிகைகள், சமூக ஆர்வலர்கள், தனியார் நிறுவனங்கள் என பலரும் நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் கேட்டு அரசின் சார்பில் நாகப்பட்டினம், விழுப்புரம், திருவாரூர் ஆகிய மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரணம் வழங்க வலியுறுத்தி தேமுதிக சட்டமன்ற உறுப்பினர் அருள்செல்வம் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மழைப் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபால் நாகை மாவட்டம் கொத்தங்குடி கிராமத்தில் ஏற்பட்ட இழப்புக்கு சரியான நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி திருத்துறைப்பூண்டி - திருவாரூர் நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மறியல் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகரத்தில் வழுதரெட்டி, அண்ணாநகர், வி.ஜி.பி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்து 3000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டனர். ஆனால் சிலருக்கு மட்டும் நிவாரணம் வழங்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதைக் கண்டித்தும், பாரபட்சமின்றி நிவாரணம் வழங்ககோரியும், சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இந்த சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications