தொடரும் பருவநிலை மாற்றம் எதிரொலி.. பூ விவசாயிகள் கவலை!
நெல்லை பருவநிலை மாற்றம் காரணமாக பூ விளைவிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை: பருவநிலை மாற்றம் காரணமாக பூ விளைவிக்க முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில வாரங்களாக பனி பொழிவு அதிகரித்துள்ளது. இது பூக்கள் உற்பத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை அடுத்துள்ள கண்டிப்பேரி, பள்ளமடை சங்கரன்கோவில் வட்டார பகுதிகளில் சம்பங்கி பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்த பூ பெரிய மாலைகளில் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. கோவில் பூஜை மற்றும் திருமண விழாக்களுக்கு இந்த பூ முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள பனி பொழிவால் இந்த பூக்கள் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையில் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது, சம்பங்கி பூக்களுக்கு நல்ல கிராக்கி இருந்தால் கிலோ ரூ.150 வரை கூட போகும். தற்போது முக்கிய பூஜைகள், முகூர்த்தம் இல்லாததால் இதற்கான தேவையும் குறைந்துள்ளது. அதிகபட்சமாக கிலோ ரூ.80 என்ற அடிப்படையில் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பனி பொழிவால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதியளவு மட்டுமே விளைச்சல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்த வரை காலை 8 மணிக்கு தொடங்கும் வெயில் மாலை 4 மணி வரை கொளுத்துகிறது. அதே வேளையில் இரவு 10 மணிக்கு தொடங்கும் குளிர் காலை 6.30 மணி வரை நீடிக்கிறது. இந்த சீதோஷ்ண நிலையால் மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.