தொடரும் பனி பொழிவு... பூக்கள் விலை கடும் உயர்வு
தொடர்ந்து பனி பொழிவு காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் குறைந்து அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
நெல்லை: தொடர்ந்து பனி பொழிவு காணப்படுவதால் பூக்களின் விளைச்சல் குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அண்மையில் முடிந்த நவராத்திரி மற்றும் சரஸ்வதி பூஜையின் போது பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லி, பிச்சி கிலோ ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. பின்னர் தீபாவளியின் போது சற்று விலை கூடியது. இதனை தொடர்ந்து விலை மந்தமாகவே இருந்து வந்தது.

தற்போது பருவநிலை மாற்றத்தால் மழை பெய்ய வேண்டிய தருணத்தில் பனி கடுமையாக பொழிகிறது. இதன் காரணமாக பூக்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இன்றும், நாளையும் வளர்பிறை முகூர்ந்த நாட்கள் என்பதால் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. நாளை திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்க இருப்பதால் பூக்களின் விலை இரவு கடுமையாக உயர்ந்தது.
கிலோ ரூ.750 விற்ற மல்லிகை பூ தற்போது ரூ.1500க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1250க்கும் விற்கப்பட்டது. கேந்தி மற்றும் செவ்வந்தி பூ கிலோ ரூ.250க்கு விற்கப்படுகிறது. பூக்கள் விலை கடுமையாக உயர்ந்ததால் சிறு வியாபாரிகள் பாதிப்புக்கு உள்ளாகினர். பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலானோர் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். இதனால் காலையும், மாலையும் சாமி கும்பிடுவதற்காக பூமாலை வாங்கி வருகின்றனர். இதனாலும் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications