கடும் பனிமூட்டம்… சென்னையில் ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு, டெல்லியில் ரத்து
சென்னை: சென்னையில் இன்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட வேண்டிய 17 விமானங்கள், அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டன. அதேபோன்று, பனிமூட்டம் காரணமாக, சென்னையில் வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஏராளமான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
நாடுமுழுவதும் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக மூடுபனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிரால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். டெல்லி, சண்டிகரைப் போல சென்னை,பெங்களூருவிலும் மூடுபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவுக்கு இன்று காலை சென்னையில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் இன்று காலை, மூடுபனி நிலவியது. காலை 4மணி முதல் 8.30மணி வரை பனிமூட்டம் அனைத்து பகுதிகளிலும் படர்ந்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். முகப்பு எரியவிட்டு சென்ற வாகனங்களும் மெதுவாகவே சென்றது. வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வந்த பஸ்கள், மெதுவாக இயக்கப்பட்டன.
கடும் மூடுபனியால் விமான மற்றும் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த திடீர் பனிமூட்டம் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இதுபோன்ற மூடுபனி நிலவுவது வழக்கம் தான். இதுபோன்ற நேரங்களில் காலை, மாலை வேளையில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத அளவில் பனி இருக்கும். இரவில் வானம் தெளிவாக இருக்கும். அப்போது காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நிலையில், தரைக்காற்று வேகமாக இல்லாமல் மெதுவாக வீசும்.
அதுபோன்ற நேரங்களில் தரைக்காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். இந்த நேரங்களில்தான் மூடுபனி உருவாகும். இதனால் எதிரே வருபவர்கள் தெரியாத அளவுக்கு பனி மூடிக்கொள்ளும். அதுபோலவே இன்றும் மூடுபனி நிலவியது. மூடுபனி காலை 10மணி வரை இருக்கும். வெயில் வரும்போது மெல்ல மெல்ல ஈரப்பதம் குறையத் தொடங்கிவிடும். என்று ரமணன் கூறினார்.
ரயில்கள் தாமதம்
கடும் பனி காரணமாக எழும்பூர் ரயில் நிலையத்திற்கு காலையில் வர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேர்ந்தது. அதே போல நெல்லை, ராமேஸ்வரம் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாமதமாக வந்தன.
அதேபோல சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி, கோவை, பிருந்தாவன், நவஜீவன் ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் அரை மணி முதல் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. அதேபோன்று சென்னை புறநகர் செல்லும் அரக்கோணம், திருத்தணி, கும்பிடிப்பூண்டி, தாம்பரம் செங்கல்பட்டு செல்லும் ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன.
விமான போக்குவரத்து பாதிப்பு
சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால் 30விமானங்கள் வரை புறப்படவும், தரையிறங்கவும் தாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டனர். இதேபோல் வெளியூர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் பனி காரணமாக பாதை தெரியாததால் மெதுவாக இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications