நிர்மலாதேவி பேசியது இவருக்காகவா?... பரபரக்கும் கல்வித்துறை!
கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி தனக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதாக சொல்லி மாணவிகளிடம் ஆசை வார்த்தை காட்டி பேசியது யாருக்காக என்று கல்வியாளர்கள் தோண்டித்துருவத் தொடங்கியுள்ளனர்.
Recommended Video
அருப்புக்கோட்டை : அருப்புக் கோட்டை தனியார் கல்லூரி கணிதப் பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளுக்கு மதிப்பெண் மற்றும் பண ஆசை காட்டி படுக்கைக்கு அழைத்தது யாருக்காக என்று கல்வியாளர்கள் தோண்டித் துருவத் தொடங்கியுள்ளனர். ஆடியோ பேச்சில் தனக்கு உயர்அதிகாரிகளின் செல்வாக்கு இருக்கிறது, தான் நினைத்தால் எதுவேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நிர்மலா ஆணித்தரமாக பேசுவதற்கு காரணமான அந்த முக்கியப்புள்ளி யார் என்பது தான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம், அருப்புக் கோட்டையில் இயங்கி வரும் அந்தத் தனியார் கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் பேசிய ஆடியோ பேச்சு வைரலாகியுள்ளது. வீட்டில் பெற்றோர் இருக்கின்றனரா, 4 பேரும் ஸ்பீக்கர் போட்டு என்னுடைய பேச்சை கேளுங்கள் என்று நிர்மலா மாணவிகளிடம் ஆசை வலை விரித்துள்ளார்.
வரிக்கு வரி 'கண்ணுங்களா' என்று சொல்லி உங்களுக்கு ஒரு வாய்ப்பு(oppurtunity) என்று ஸ்லோ பாய்சன் போல அந்த கொடுமையான செய்தியை மாணவிகளிடம் கூறுகிறார். தன்னால் எதுவும் செய்ய முடியும் அந்த அளவிற்கு உயர் அதிகாரிகளின் அபிமானம் பெற்றவர் என்று தன்னைப் பற்றி மாணவிகளிடம் பெருமை பேசுகிறார் நிர்மலா. தான் சொல்வதற்கு ஒப்புகொண்டால் 85 சதவீத மதிப்பெண், மாதாமாதம் கைநிறைய பணம் அந்தப் பணத்தையும் தான் ஒரு நிறுவனம் நடத்துவதாகவும் அதன் மூலம் பெற்றோருக்கு அனுப்பிவிட்டால் சந்தேகம் இருக்காது என்றும் ஆலோசனை கூறுகிறார்.
மறுத்த மாணவிகள்
நான்கு மாணவிகளிடம் ஆசைவார்த்தை கூறி, அவர் பேசும் பேச்சுக்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகள் வேண்டவே வேண்டாம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறியும் அவசரம் வேண்டாம் யோசித்து முடிவெடுங்கள் நான்கு நாட்கள் கழித்து பதில் சொன்னால் போதும் என்கிறார். விரைவில் இந்த வட்டாரத்தில் நடைபெற உள்ள பல்கலைக்கழக நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் உயர் அதிகாரிக்காகத் தான் இந்த ஏற்பாட்டை நிர்மலா செய்தார் என்று சொல்லப்படுகிறது.
சகஜமான விஷயம் தானே
அவசரம் என்பதால் தான் உங்களிடம் கேட்கிறேன் என்று நிர்மலாவே அந்த ஆடியோவில் கூறி இருப்பதை கேட்டால் இதை புரிந்து கொள்ள முடியும். தனக்கான காரியங்களை சாதித்துக் கொள்ள மாணவிகளை பகடைக்காயாக பயன்படுத்த நினைத்த பேராசிரியை நிர்மலா வெட்கமே இல்லாமல் அந்த ஆடியோவில் இந்த காலகட்டத்தில் இதெல்லாம் சகஜம் என்றும் சொல்வது தான் கொடுமையின் உச்சகட்டம்.
நிர்மலா யாருக்காக பேசினார்?
நிர்மலா மாணவிகளுடன் உரையாடிய ஆடியோ வெளியானதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அவர் தற்காலிகமாக சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், 'யாருக்காக நிர்மலா தேவி பேசுகிறார்?' எனத் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர் கல்வியாளர்கள் சிலர். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், " சென்னை பல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாட்டின் பெரும்பாலான கல்வி நிலையங்களில், மாணவிகளை போகப் பொருளாகப் பயன்படுத்தும் போக்கு காலம்காலமாக நிலவிவருகிறது. பல்கலைக்கழக மானியக் குழுவின் தரச்சான்று பெறுவதற்காக, ஆய்வுக்கு வரும் வடமாநில பேராசிரியர்களுக்கு 'சகல' விஷயங்களையும் செய்து தரக்கூடிய கல்லூரிகள் உள்ளன.
உயர் பொறுப்பாளர்களை குளிர்விக்க
யு.ஜி.சி உள்பட உயர் கல்வித்துறையின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களைக் குளிர்விப்பதன் மூலம் கல்லூரிக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். அடிப்படை வசதிகளே இல்லாவிட்டாலும், சம்பந்தப்பட்ட கல்லூரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தனர். வேலிக்கு பயிராக இருக்க வேண்டிய பேராசிரியரே மாணவிகளை இப்படி தவறான வழி காட்டுவதோடு ஆசை வார்த்தை கூறும் கொடுமையை என்னவென்று சொல்வது.
கருப்பு ஆடு வெளிவருமா?
இந்த விஷயத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள 5 நபர் விசாரணைக்குழு உண்மையான கருப்பு ஆடு யார் என்பதை வெளிக்கொண்டு வருமா? அல்லது தங்களது அதிகாரத்தை மீறிய உயர் அதிகாரிகளாக அவர்கள் இருக்கும் பட்சத்தில் விசாரணையை இழுத்து மூடிவிடுமா. பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்றால் கல்விக் கூடங்களில் அதிலும் பெண் பேராசிரியையாலே பாதுகாப்பு இல்லாத நிலையில் தான் இன்று தமிழகம் இருக்கிறது.