வெள்ள நிவாரண நிதிக்கு ஊதியம் பிடிக்க கட்டாய கடிதம்: அதிருப்தியில் அரசு ஊழியர்கள் !
சென்னை: அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர் மற்றும் ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதிக்கு ஊதியம் பிடிக்க கட்டாய விருப்பக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாக அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்து வருகின்றது. திரை நட்சத்திரங்களும், தொழிலதிபர்களும், தன்னார்வ தொண்டு நிருவனங்களும் தாங்களாகவே முன்வந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வெள்ள நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்துக் கொள்ளும்படி அரசு ஊழியர் சங்கம் சார்பில், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது.
அதில், விருப்ப கடிதம் வழங்கும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்' என சம்பளம் வழங்கும் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து அலுவலர் மற்றும் ஊழியர்களும் விருப்பக் கடிதம் கொடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகள் கட்டாயப்படுத்துகின்றனர் என்று அரசு ஊழியர்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது. இதனால், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும், இதன் மூலம் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில், மழை, வெள்ளத்தால் துன்பப்படும் மக்களுக்கு அரசு ஊழியர்களில் பெரும்பாலானோர் வசூல் செய்து நிதி அளித்ததுடன், ஏற்கனவே பல்வேறு நல உதவிகளை வழங்கியுள்ளோம். முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் வழங்குவது, அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், அனைவரும் விருப்பக் கடிதத்தை கட்டாயமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த உத்தரவை பாதிக்கப்பட்ட மாவட்டங்களிலும் ஒருசில அலுவலர்கள் பின்பற்றுவதுதான், எங்களுக்கு வேதனையை அளிக்கிறது என்று வேதனையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications