சாரைப் பாம்பு சாம்பார்.. திருப்பத்தூர் இளைஞரின் கொடூரம்! வனத்துறை அதிரடி.. இப்போது கம்பி எண்ணுகிறார்
திருப்பத்தூர்: விஷமற்ற சாரைப் பாம்பை பிடித்து கொன்று, தோலுரித்து சமைத்து சாப்பிட்ட இளைஞர் திருப்பத்தூரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதை இந்த இளைஞர் சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
பாம்புகள் இயற்கை சங்கிலியின் மிக முக்கிய கண்ணிகளாகும். பெருமளவில் விவசாயிகளுக்கு பாம்புகள் பேருதவி செய்கின்றன. ஆனால், பாம்பை கண்டாலே அடித்து கொல்லும் நிலைமை சமீப காலமாக தீவிரமடைந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் சமீபத்தில் திருப்பத்தூரில் நடந்திருக்கிறது. ராஜேஷ்குமார் எனும் இளைஞர் சாரைப் பாம்பு ஒன்றை அடித்து கொன்றிருக்கிறார். மட்டுமல்லாது அதன் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்திருக்கிறார்.

மேலும் இதனை வீடியோவாக படம் பிடித்து சோஷியல் மீடியாக்களிலும் பதிவேற்றிருக்கிறார். இந்த வீடியோ டிரெண்டான நிலையில், வனத்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சாரைப் பாம்பு கறியை சமைத்து சாப்பிட்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக வன ஆர்வலர்கள் கூறுகையில், "நம்மில் பலரும் பாம்பை பார்த்தவுடன் அடித்து கொன்றுவிடுகிறோம். ஆனால் இப்படி கொல்வது சட்டப்படி குற்றம் என்று பலருக்கு தெரிவதில்லை. இந்தியாவில் இருக்கும் பாம்புகளில் 70 சதவிகிதம் விஷமற்றவை, 30 சதவிகிதம்தான் விஷமானவை. அதிலும் குறிப்பிட்ட 4 வகை பாம்புகள்தான் விஷம் கொண்டவை. நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கட்டுவிரியன் மற்றும் கண்ணாடி விரியன் ஆகியவைதான் விஷம் கொண்டவை.
இந்த பாம்புகள் எல்லா நேரங்களிலும் விஷத்தை பயன்படுத்துவதில்லை. சில நேரங்களில் Drybite எனப்படும் விஷமற்ற கடியைதான் கடிக்கின்றன. உதாரணமாக வீட்டில் இந்த பாம்புகள் இருக்கும்போது அதை வெளியேற்ற வனத்துறையினருக்கு தகவல் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாமல் அடித்துக்கொல்கிறேன் என்று அது வெளியேற வாய்ப்பிருக்கும் வழிகளை எல்லாம் அடைத்துவிடும்போது அது சீற்றம் கொண்டு கடித்துவிடுகிறது. இது நிச்சயம் அதிக விஷத்தை செலுத்தும் கடியாகத்தான் இருக்கும்.
மற்றபடி வயலில் நடந்து செல்லும்பொது எதிர்பாராத நேரத்தில் எதிர்படும் பாம்புகள் நம்மை எச்சரிக்கவே சீற்றமடைகின்றன. பெரும்பாலும் பாம்புகள் நம்மை விட மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவையாகும். எனவே பாம்பை மிக அருகில் பார்ப்பதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இப்படித்தான் பாம்புகளும் நமக்குமான உறவுகள் இருக்கின்றன. இது தவிர எலி மற்றும் பூச்சிகளை உட்கொள்வதன் மூலம் விவசாயிகளுக்கும் மிகுந்த உதவியாக இருக்கின்றன.
இப்படி இருக்கையில் இதை பார்த்தவுடன் அடித்துக்கொல்வது சட்டப்படி குற்றமாகும். காட்டுயிர் பாதுகாப்பு சட்டம் பாம்புகளை கொல்வதை தவறு என்றும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. காட்டுயிர் பாதுகாப்பு சட்டம், 1972இல் அட்டவணை 1, பிரிவு சி-யின் கீழ் பாம்புகள் வருகின்றன. யானை, புலிகள் கூட இந்த பிரிவின் கீழ்தான் வருகின்றன. எனவே பாம்பை கொல்வது, உணவுக்காக வேட்டையாடுவது, தோலுக்காக வேட்டையாடுவது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும்.
இதற்காக 3-7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை அபராததும் விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறுகின்றனர். சாரைப் பாம்புகள் விவசாய நிலங்களில் எலிகளை கட்டுக்குள் வைத்திருக்க பெரும் உதவி செய்கிறது. இது விஷமற்றது என்பதால் இதனை எளிதாக சிலர் கொன்றுவிடுகின்றனர்.












Click it and Unblock the Notifications