நெல்லை அருகே ஊருக்குள் இறங்கிய 'கொம்பன்'
நெல்லை: தமிழக-கேரளா எல்லைப்பகுதியான மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான செங்கோட்டை தாலுகா, புளியரை, பகவதிபுரம் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் புகும் யானைகளின் வரவு அதிகரித்து வருகிறது.
இப்பகுதிக்குள் வரும் யானைகள் கூட்டம், கூட்டமாக வந்து, வனப்பகுதியின் அடிவாரத்தில் இருக்கும் தனியார் தோட்டங்களில் புகுந்து ,சிறிய.. பெரிய தென்னை மரங்கள், பாக்கு மரங்களை அடியோடு சாய்த்தும், சிறிய மரங்களை முழுமையாக சேதப்படுத்தியும், பலா மரங்களில் காய்த்துக் கிடக்கும் பலாப் பழங்களை அப்படியே பறித்து முழுமையாக தின்று வருகின்றன.

இன்று காலை, பகவதிபுரம் பகுதியை சார்ந்த கிருஷ்ணன் என்பவரது தோட்டத்தில் புகுந்த இரண்டு யானைகள், மற்றும் ஒரு குட்டி யானை ஆகியவை, அங்குள்ள சுமார் 80க்கும் மேற்ப்பட்ட பாக்கு, தென்னை மரங்களை சேதப்படுத்தியும், பலாப் பழங்களை பறித்தும் தின்றும் சென்றுள்ளன.

யானையின் வரவால், தோட்டங்களில் காவலுக்கு இருந்தவர்கள் தற்போது அச்சத்தோடு இரவில் காவல் காப்பதை விட்டு விட்டு பகலில் மட்டுமே பணிக்கு சென்றாலும், அங்கு யானைகளின் லத்தி சாணங்களை பார்த்து பீதியடைந்துள்ளனர்.

வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தும் வனத்துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். சேதங்கள் அதிகரித்துள்ளதால் இழப்பீடு வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications