2 மாஜி தேமுதிக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணியில் ஐக்கியம்!!
தேமுதிக முன்னாள் எம்எல்ஏக்களான அருண்பாண்டியன், சுந்தர்ராஜன் ஆகியோரும் முதல்வர் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை: தேமுதிக முன்னாள் எம்எல்ஏக்களான அருண்பாண்டியன், சுந்தர் ராஜன் உள்ளிட்டோரும் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ் அணிக்கு அதிகரிக்கும் ஆதரவால் அந்த அணி உற்சாகத்தில் திளைத்துள்ளது.
அதிகாரப் போட்டியால் அதிமுக முதல்வர் ஓபிஎஸ் அணி மற்றும் சசிகலா அணி என இரண்டாக பிரிந்தது. முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் சசிகலா பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நூறுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை தனது பிடியில் 5வது நாளாக சிறை வைத்துள்ளார்.
எம்எல்ஏக்களை வெளியே விட்டால் அவர்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறி விடுவார்கள் என அஞ்சி சசிகலா இந்த நடவடிக்கையை கையாண்டு வருகிறார். இதனால் மக்கள் மத்தியில் சசிகலா மேல் இருக்கும் வெறுப்பு அதிகரித்து வருகிறது.
அதிமுக நிர்வாகிகள் பலரும் ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு தாவிய அக்கட்சி எம்எல்ஏக்கள் சுந்தர் ராஜன் மற்றும் அருண்பாண்டியன் ஆகியோர் ஓபிஎஸ் அணிக்கு தெரிவித்துள்ளனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் இன்று சுந்தர்ராஜன் மற்றும் அருண் பாண்டியனை காணமுடிந்தது. கடந்த 5 நாட்களை காட்டிலும் ஓபிஎஸ் அணிக்கு இன்று ஆதரவு பெருகி வருகிறது. இதனால் மேலும் பல புதிய திருப்பங்கள் தமிழக அரசியலில் இன்று ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.