முன்னாள் மதிமுக மா.செ டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தார்
மதுரை: மதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் மதுரையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
மதுரை புறநகர் மாவட்ட ம.தி.மு.க. செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகினார். இது குறித்த ராஜினாமா கடிதத்தையும் வைகோவிற்கு அனுப்பி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சரவணன், வைகோ நல்ல தலைவராக இருக்கிறார். ஆனால், கூட்டணி குறித்து முடிவு எடுப்பதில் தடுமாறுகிறார். தன்னிச்சையான முடிவு எடுக்கிறார். இதனால்தான் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் விலகல் முடிவை எடுத்தனர்.
கட்சிக்காக நான் எவ்வளவோ செலவு செய்துள்ளேன். வைகோ அதையெல்லாம் மறந்துவிட்டார். இப்போதைக்கு மதிமுகவில் இருந்து விலகியுள்ளேன். மருத்துவத்துறையில் கவனம் செலுத்து உள்ளேன். இன்னும் 10 நாட்களில் அரசியலில் எனது அடுத்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மதுரைக்கு வந்திருந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் டாக்டர் சரவணன் மற்றும் ஆதரவாளர்கள் பாரதிய ஜனதாவில் இணைந்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ம.தி.மு.க. மாவட்ட செயலாளராக இருந்த டாக்டர் சரவணன் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். அவரது வருகை தென் மாவட்டத்தில் பாரதிய ஜனதாவை வலுப்படுத்த உதவியாக இருக்கும் என கருதுகிறேன் என்றார்.
மதிமுகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர்கள் திமுகவில் இணைந்து வரும் நிலையில் டாக்டர் சரவணன் பாஜகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications