கலர் டிவி ஊழல் வழக்கு.. மாஜி அமைச்சரை விடுவித்தது சரியே.. ஹைகோர்ட் அதிரடி!
கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை விடுவித்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை: கலர் டிவி ஊழல் வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை விடுவித்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1991-96ஆம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியின் போது, கிராம ஊராட்சிகளுக்கு இலவச வண்ணத்தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டது.
இதில் 82 லட்சம் ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சர் செல்வகணபதி, எல்காட் நிறுவன கிளை மேலாளர் பொம்மைநாயக்கன், முதுநிலை மேலாளர் புருஷோத்தமன் ஆகியோர் மீது சிபிஐ ஊழல் வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ நீதிமன்றம் 2009ஆம் ஆண்டு செல்வகணபதி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து சிபிஐ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்வகணபதியை விடுவித்தது சரியே எனக்கூறி சிபிஐ தொடுத்த மேல்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது