மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன்... ஹைகோர்ட் உத்தரவு!
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை : டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏவும் சமீபத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி கடந்த 2011- 2015 காலகட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது 16 பேரிடம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.95 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர் போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

இந்த வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சகாயராஜ், பிரபு உள்ளிட்ட 3 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது அக்டோபர் 3ம் தேதி வரை செந்தில்பாலாஜியை கைது செய்யமாட்டோம் என்று உறுதியளித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தன்னை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செந்தில்பாலாஜி தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் இருந்து தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications