குறைந்த விலையில் பிளாட்- கோடிக்கணக்கில் மோசடி: கணவன்–மனைவி உள்பட நால்வர் கைது
சென்னை: குறைந்த விலையில் பிளாட் வாங்கித்தருவதாக கூறி கோடிக்கணக்கில் பண மோசடி செய்த நால்வரை போலீசார் கைது செய்தனர்.
அயனாவரத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் என்பவரிடம் பள்ளிக்கரணையை சேர்ந்த ஜார்ஜ் எட்வின் நண்பராக அறிமுகமானார். அவர் தனக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உயர் அதிகாரிகளை தெரியும் என்றும் குறைந்த விலையில் பிளாட்டுகள் வாங்கலாம் என்று தெரிவித்தார்.
இதனை நம்பிய வெங்கடேசன் ரூ.10 லட்சத்தை ஜார்ஜ் எட்வினிடம் கொடுத்தார். இதற்கு ஜார்ஜ் எட்வினின் மனைவி மகேஸ்வரி, மகள்கள் பிரீத்தி பிரைட், நான்சிபிரியா மற்றும் உறவினர் எட்வர்ட் ஆகியோர் துணையாக பேசினர்.
இந்த நிலையில் ஜார்ஜ் எட்வின் குறிப்பிட்டபடி பிளாட் வாங்கி கொடுக்கவில்லை. அவர் ஏமாற்றியது தெரிந்தது. இதுகுறித்து வெங்கடேசன் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் செய்தார். கமிஷனர் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது ஜார்ஜ்எட்வின், அவரது மனைவி மகேஸ்வரி உள்பட 5 பேரும் சேர்ந்து வீட்டு வாரிய குடியிருப்பில் பிளாட் வாங்கி கொடுப்பதாக வெங்கடேசனிடம் பணம் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து ஜார்ஜ் எட்வின், அவரது மனைவி மகேஸ்வரி, மகள்கள் பிரீத்தி பிரைட், நான்சிபிரியா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் ஏராளமானோரிடம் பலகோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
கால்நடை மருத்துவர் மணிவேலிடம் சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரியத்தில் பிளாட் வாங்கி தருவதாக ரூ.9 லட்சமும், அதே இடத்தில் 5 பிளாட்டுகள் வாங்கி கொடுப்பதாக தனியார் கல்லூரி பேராசிரியர் தங்கவேலிடம் ரூ.40 லட்சமும் மோசடியாக பணம் பெற்றுள்ளனர்.மேலும் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக மாணிக்கம் என்பவரிடம் ரூ.2 லட்சம் பெற்றுள்ளதும் தெரிந்தது.