தூத்துக்குடி: கிறிஸ்துவ ஆலய விழாவில் மோதல் - துணை மேயர் மகன் உள்பட 4 பேர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிறித்துவ ஆலய திருவிழாவில் ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக துணைமேயரின் மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகேயுள்ள லூர்தம்மாள்புரத்தில் லூர்து மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலய திருவிழாவை தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் சேவியர் தலைமையிலான தரப்பினர் முன்னிட்டு நடத்தி வந்தனர்.

இந்த நிலையல் இந்தாண்டு திருவிழாவை யார் முன்னிட்டு நடத்துவது என துணை மேயர் சேவியர் தரப்புக்கும், அதே பகுதியை சேர்ந்த லூர்துராஜ், சவேரியர் பிச்சை தலைமையிலான மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதுகுறித்து இரு தரப்பினரும் தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மாலை லூர்துராஜ், சவேரியர் பிச்சை இருவரும் லூர்தம்மாள்புரத்தில் உள்ள ஒரு கடையில் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு இரும்பு கம்பி, உருட்டை கட்டை ஆயுதங்களுடன் வந்த துணை மேயர் தரப்பினர் அவர்கள் இருவர் மீதும் கொலை வெறி தாக்குதல் நடத்தினர். இதில் 2பேருக்கும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை பொதுமக்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தகவல் கேட்டதும் லூர்துராஜ் உறவினர்கள் மறறும் பொதுமக்கள் அனைவரும் தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் இறங்கினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட துணை மேயர் சேவியர் தரப்பினரை கைது செய்ய கோரியும், சேவியரை கண்டித்தும் அவ்ர்கள் கோஷங்கள் போட்டனர்.
இந்த தகவல் கேட்டு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனிடையே லூர்துராஜ், சவேரியாபிச்சையை தாக்கியது தொடர்பாக துணைமேயர் சேவியரின் மகன் ஆல்வின், மற்றும் பிரபாகர், சேதுராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் லூர்தம்மாள்புரம் பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications