இந்து முன்னணி சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது!
அம்பத்தூர்: சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி மாவட்ட செயலாளரான சுரேஷ்குமார் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் எஸ்டேட் மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ்குமார். திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி மாவட்ட தலைவராக பொறுப்பு வகித்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி இவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் உட்பட 10 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்தனர்.
இந்த நிலையில் கொலையாளிகளுக்கு உடந்தையாக இருந்து உதவிகள் செய்ததாக மண்ணூர்பேட்டையை சேர்ந்த முகாஜீர், ராஜாமுகமது, ஷாசிங் என்ற டோக்கிலிங், ஜப்பார் ஆகிய மேலும் 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்ட 4 பேரும் பாடி மண்ணூர்பேட்டையை சேர்ந்தவர்கள். விசாரணையில் அவர்கள் தான் கொலையாளிகளுக்கு தங்குவதற்கு இடம், உணவு போன்ற அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து உதவி செய்துள்ளனர்.
மேலும் சுரேஷ்குமாரை கொலை செய்வது குறித்தும் பாடியில் உள்ள அலுவலகத்தில் தான் அவர்கள் தீட்டம் தீட்டியுள்ளனர். சுரேஷ்குமாரை அடுத்து மேலும் சில தலைவர்களுக்கு அவர்கள் குறி வைத்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.
நேற்று கைதான 4 பேரையும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 9 பேர்களையும் திருவள்ளூர் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி முகமது ஜபருல்லாகான் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள்.
அவர்களை 22 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இவர்கள் அனைவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.