நிலத்தை விற்பதாகக் கூறி ரூ.7 கோடி மோசடி.. பலே மதபோதகரை மடக்கிப் பிடித்த போலீசார்
நிலம் மற்றும் கட்டிடத்தை விற்பதாக கூறி 7 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த கிறிஸ்தவ மத போதகரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.
திருச்சி: திருச்சி மாவட்டம் கருமண்டபம் பொன்னகர் பகுதியில் திருச்சி சிட்டி ஏஜி கிருஸ்தவ திருச்சபை என்ற பெயரில் பெந்தகோஸ்தே கிறிஸ்தவ சபையை நார்மன் பாஸ்கர் என்பவர் நடத்தி வருகிறார்.
இந்த சபைக்கு ஞாயிறுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று பிரார்த்தனை செய்வது வழக்கம். 70 செண்ட் நிலத்தில் கட்டப்பட்ட ஏஜி பெந்தகோஸ்தே சபையை, நார்மன் பாஸ்கர், விஜிபி ஹவுசிங் பிரைவேட் லிமிட்டெட்டிற்கு விற்க முன் வந்துள்ளார்.
அந்த முடிவின்படி, இரண்டு தரப்பினரும் பேசி இதற்காக ஓப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது. பின்னர், இடத்தை வாங்கிய விஜிபி ஹவுசிங் நிறுவனத்தார் இடத்திற்குண்டான தொகையை சிறிது சிறிதாக கொடுத்துள்ளனர். அப்படி 6 கோடியே 88 லட்சம் ரூபாய் கடந்த 2014-ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது.

மோசடிப் புகார்
சுமார் 7 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்ட பின்னரும் பத்திரப்பதிவுக்கு உடன்படாமல் நார்மன் பாஸ்கர் இழுத்தடித்துள்ளார். இதனால் கடுப்பான விஜிபி ஹவுசிங் நிறுவனத்தார் நார்மன் பாஸ்கர் மற்றும் சபையில் உள்ள கமிட்டி உறுப்பினர் ஸ்டாலின் மாணிக்கராஜ், ஸ்டீஃபன் ஜெயக்குமார், ஆபிரகாம் தாமஸ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குத் தொடர்ந்தனர்.
தலை மறைவு
இந்த வழக்கில், நார்மன் பாஸ்கரைத் தவிர மற்றவர்கள், நிலவிற்பனைக்கும் தங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று கூறி, முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். அதே நேரத்தில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நார்மன் கேட்ட முன் ஜாமீன் மறுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த நார்மன் தலைமறைவானார்.
கைது
மோசடி வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நார்மன் பாஸ்கரை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பரபரப்பு
நார்மன் பாஸ்கர் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். என்றாலும் மதபோதகர் ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications