ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தால்.. கடலூரில் ஒரு நாள் ப்ரீயாக டீ சாப்பிடலாம்!
கடலூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்தால் அன்று முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக டீ வழங்கப்படும் என்று கடலூர் நகர டீக்கடை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
டீக்கடை அதிபராக இருந்தவரான ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக உள்ள நிலையில் டீக்கடைக்காரர்களின் இந்த அறிவிப்பு கவனிப்புக்குரியதாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்காக விதம் விதமாக போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கடலூர் டீக்கடை உரிமையாளர்களும் தங்கள் பங்குக்குப் போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரதம்
கடலூரில் தலைவர் வேணுகோபால் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் திரளான டீக்கடைக்காரர்கள் கலந்து கொண்டனர்.
விடுதலை செய் விடுதலை செய்
காவல்துறையை பொதுமக்களின் காவல் அரணாக மாற்றியவர் ஜெயலலிதா. அன்னிய முதலீட்டை தடுத்து நிறுத்தியவர். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இலவச டீ
இந்த நிலையில் ஜெயலலிதா ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டால் ஒரு நாள் முழுவதும் பொது மக்களுக்கு இலவசமாக டீ வழங்கப்படும் என்று கடலூரில் உள்ள சில டீக்கடைகள் அறிவிப்பும் வெளியிட்டுள்ளன.
ஜெயலலிதா ஆதரவு டீக்கடைகள்
பல டீக்கடைகளில் ஜெயலலிதா ஆதரவுப் போக்கும் காணப்படுகிறதாம். இவர்களில் பலர் அதிமுகவினர் என்பது முக்கியமானது.