நீலகிரியில் 611 எய்ட்ஸ் நோயாளிகள்!
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கிட்டதட்ட 611 எய்ட்ஸ் நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான இந்த மாவட்டத்தில் தற்போது எய்ட்ஸ் நோாயாளிகளும் பெருகி வருகிறார்கள் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியினை பொதுமக்களிடமும், சுகாதரத்துறையினரிடமும் ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடமும் 2014 டிசம்பர் 1 ஆம் தேதி ‘‘புதிய எச்.ஐ.வி. தொற்றுகள் இல்லாத தமிழகம், புறக்கணித்தல் இல்லாத தமிழகம், எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத தமிழகம்'' என்ற மைய கருத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக எச்.ஐ.வி , எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 100 சதவீத கர்ப்பிணி தாய்மார்களுக்கு எச்.ஐ.வி, எய்ட்ஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 611 எச்.ஐ.வி தொற்றுள்ளவர்களை இதுநாள் வரை கண்டறியப்பட்டு நோயாளிகளுக்கு ஏ.ஆர்.டி என்ற மையத்தில் இலவசமாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.