இலவச வாஷிங்மெஷின், மதுவிலக்கு அமலாகாது.. என்.ஆர்.காங்கிரஸ் அதிரடி தேர்தல் அறிக்கை
புதுச்சேரி: தமிழகத்தை போலவே வரும் 16ம் தேதி புதுச்சேரி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை, இன்று மாலை, முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
இந்த தேர்தல் அறிக்கையில் கவர்ச்சிகரமான சில திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும், 10 கி.லோ இலவச அரிசி, மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 20 கிலோவாக உயர்த்தப்படும்.
புதுச்சேரிக்கு, யூனியன் பிரதேசம் என்ற நிலையில் இருந்து மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்.
உள்ளூர் பேருந்து கட்டணம் அதிகபட்சம் ரூ.5 என்ற அளவில் நிர்ணயிக்கப்படும்.
மருத்துவ படிப்பு உதவி தொகை 4 லட்சமாக உயர்த்தி தரப்படும்.
விவசாய கடனுக்கான வட்டியை அரசு செலுத்தும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும்.
புதுச்சேரியில் மது விலக்கு அமல்படுத்தப்படாது.
இவ்வாறு தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.