ஒருதலைக்காதல்… ஆசிரியர் தினத்தன்று கொல்லப்பட்ட தூத்துக்குடி ஆசிரியைக்கு இறுதிச் சடங்கு
தூத்துக்குடி: ஒருதலைக்காதல் விவகாரத்தில் தூத்துக்குடி சர்ச் ஒன்றில் வெட்டிக் கொல்லப்பட்ட ஆசிரியர் பிரான்சினாவின் உடல், ஆசிரியர் தினமான நேற்று இறுதி சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. அவரது அண்ணன் பிராங்கிளின் வெளியூரில் இருந்து வர தாமதமானதால் 6 நாட்கள் கழித்து உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு இந்திரா நகரைச் சேர்ந்த நியூமென் என்பவரின் மகள் பிரான்சினா. இவர் தூத்துக்குடி சண்முகபுரம் பேருரு ஆலய வளாகத்தில் உள்ள ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கும் தூத்துக்குடி அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ஜான் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சர்ச்சில் பிரான்சினா கண் மூடி பிரார்த்தனையில் மூழ்கி இருந்த போது, ஒருதலையாக காதலித்து வந்த கீகன் வெட்டிக் கொலை செய்தார். பின்னர் வீட்டிற்கு சென்ற கீகனும் தற்கொலை செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட ஆசிரியர் பிரான்சினாவின் அண்ணன் பிராங்கிளின் கப்பல் மாலுமியாக பணியாற்றி வருகிறார். பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் அவர் இருந்த போது, இறப்புச் செய்தி அவரை அடைந்துள்ளது. அங்கிருந்து விமானம் மூலம் ஞாயிற்று கிழமை காலை 6.30 மணிக்குத்தான் இந்தியா வந்து சேர்ந்துள்ளார் பிராங்கிளின்.
இதனையடுத்து, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த பிரான்சினாவின் உடல் வீட்டிற்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications