வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம்: ஜி.கே.மணி
சென்னை: வரும் சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் வாக்காளர்களுக்கு ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
தமிழகத்தில் நிறைவேற்ற உள்ள திட்டங்கள் குறித்த கையேட்டை சென்னையில் பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் நிர்வாகிகள் வெளியிட்டனர். அதில் அன்புமணி ராமதாஸ் பற்றிய திறமை, சாதனை, தகுதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருந்தன.

பின்னர் ஜிகே.மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி பற்றிய சிறப்பு கையேடு, சென்னை உட்பட 32 மாவட்டங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார். இந்த கையேட்டில் அன்புமணி, மத்திய அமைச்சராக இருந்த போது அவர் ஆற்றிய சாதனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமக முதல்வர் வேட்பாளராக கடந்த பிப்ரவரி 5ம் தேதி அறிவிக்கப்பட்டார். அன்று முதல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார். மேலும் அவரை பற்றி முழு விபரங்களையும் தெரிந்து கொள்வதற்காக இந்த சிறப்பு கையேடு வெளியிடப்படுகிறது.
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும், அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் விநியோகிக்கப்படும். இது அனைவர் கையில் கிடைக்கும் போது மக்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்படும். அதேநேரம் தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்படும். வரும் தேர்தலில் வாக்காளர்களுக்கு பாமக சார்பில் ஒரு பைசா கூட கொடுக்க மாட்டோம். கொடுக்கும் கட்சிகள் மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications